கொரோனா பாதிப்புள்ள தாய், குழந்தைக்கு பாலூட்டலாமா?

Can a corona-infected mother breastfeed her baby

by SAM ASIR, Oct 4, 2020, 18:36 PM IST

கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அவ்வகையில் பேறுகாலத்தை எதிர்பார்த்திருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் மத்தியில் உள்ள பெரிய கேள்வி, தாய் கோவிட்-19 கிருமி பாதிப்புக்கு உள்ளானால் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா? என்பது ஆகும்.

தாய்ப்பால்

தாய்ப்பால் பல ஊட்டச்சத்துகள் நிறைந்தது. பச்சிளங்குழந்தைகளை அது பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்பு சரியான விகிதத்தில் கலந்திருக்கும் தாய்ப்பால் பச்சிளங்குழந்தைகளுக்கு அவசியமாகும்.

தாய்ப்பால் அருந்தும்போது குழந்தை தாயின் உடலுடன் நெருங்கியிருப்பதால் தாய்க்கு கோவிட்-19 பாதிப்பிருந்தால் குழந்தைக்கு பரவக்கூடும் என்ற அச்சம் பரவலாக காணப்படுகிறது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஊட்டச்சத்து குறைவு, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக மரணமடையும் பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். தாய்ப்பால் தவிர ஏனையவிதங்களில் தயாரிக்கப்படும் பாலில் இந்த அளவு சத்துகள் இல்லாதது மட்டுமல்ல, பால் பொருள்களை வாங்கி ஊட்டுவது செலவு நிறைந்ததுமாகும். தாய்ப்பாலுக்கு மற்ற பால் பொருள்கள் எவ்விதத்திலும் ஈடாகாது.

தாய்க்குப் பாதுகாப்பு

தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைக்கும் தாய்க்கும் இடையே நல்ல பிணைப்பை உருவாக்குகிறது. பெண்களுக்கு மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பை தாய்ப்பாலூட்டுவது குறைக்கிறது.

ஒருவேளை பாலூட்டும் தாய்க்கு கோவிட்-19 பாதிப்பிருந்தால் தாயின் உடலில் அதற்கான எதிர்ப்பாற்றலும் உருவாகியிருக்கும். தாயின் இரத்தத்தில் இருக்கும் கோவிட்-19 எதிர்ப்பாற்றல், தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் கிடைக்கக்கூடும். ஆகவே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு கோவிட்-19 கிருமியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் உருவாக வாய்ப்புள்ளது.

அபாயம் குறைவு

தாய்ப்பால் வழியாக கோவிட்-19 கிருமி பரவும் என்ற திட்டமான முடிவுக்கு வருவதற்கு போதுமான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். கிடைத்துள்ள சில தரவுகள், தாய்ப்பால் வழியாக கிருமி பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கவில்லை.தாய்ப்பாலை காட்டிலும், தாய் குழந்தையை தொடுவதன் மூலமாக அல்லது தாயின் வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் மூலமாகவே கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். போதுமான முன்னெச்சரிக்கையை கடைபிடித்து, கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, முககவசம் அணிந்து பாலூட்டினால் பாதுகாப்பாக இருக்கும்.

கோவிட்-19 கிருமி தொற்றுள்ள தாய்மார் கடைபிடிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குழந்தைக்கு பாலூட்டும் முன்பு கைகளை குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும்.இருமல் அல்லது தும்மல் வந்தால் அதை சரியானபடி துடைத்து பின்னர் கைகளை கழுவிவிட்டே குழந்தையை தூக்கவேண்டும்.
பாலூட்டும் தாய் பயன்படுத்தும் சானிடைசர் 60 சதவீதம் ஆல்கஹால் கலந்ததாக இருக்கவேண்டும்.கூடுமானவரை முகக்கவசம் அணிந்துகொண்டு பாலூட்டவும்.
ஒவ்வொரு முறை பாலூட்டுவதற்கு முன்பும் மார்பினை கழுவ வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மார்பு திறந்திருக்கும்போது, தாய் இருமினால் அல்லது தும்மினால் குறைந்தது 20 விநாடிகள் மார்பினை சோப்பினால் கழுவ வேண்டும்.
தயக்கம் இருந்தால் தாய்ப்பாலை உரிய பம்ப் மூலம் உறிஞ்சி, கோவிட்-19 பாதிப்பில்லாதவர் மூலம் குழந்தைக்கு ஊட்டலாம்.

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் கோவிட்-19 பரவும் அபாயம் மிகவும் குறைவு என்பதால் தாய்மார் தயக்கமின்றி உரிய எச்சரிக்கையுடன் பாலூட்டலாம்.

You'r reading கொரோனா பாதிப்புள்ள தாய், குழந்தைக்கு பாலூட்டலாமா? Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை