கோலிவுட்டிலிருந்து நடிகைகள் அசின், ஜெனிலியா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி, எமி ஜாக்ஸன். ஸ்ருதிஹாசன் எனப் பல நடிகைகள் இந்திக்கு சென்றார்கள். இவர்களில் யாரும் அங்கு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் திரும்பினர். நடிகர் அசின், எமி ஜாக்ஸன் இருவரும் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் செட்டிலாகி விட்டனர். காஜல், தமன்னா. ஸ்ருதி ஹாசன் மீண்டும் தென்னிந்தியத் திரையுலகிற்கே திரும்பி விட்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி ஆசையில் சென்றார். முதல் படத்திலேயே அவருக்குப் பட வாய்ப்பு கை நழுவியது.
நயன்தாராவுக்குப் பல முறை இந்தியில் நடிக்க அழைப்பு வந்தும் செல்லாமலிருந்தார்.
நீண்ட வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். ரன்தீப் ஹூடா இதில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சமீபத்திய தகவல் நயன்தாரா அந்த வெப் சீரிஸிலிருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகி விட்டாராம். இவர் தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கொரோனா தளர்வில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. ரஜினிகாந்த்தும் உடல் நிலை மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக ஓய்வில் இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் படம் திரைக்கு உள்ளதால் அதற்கேற்ப நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கித் தர வேண்டி உள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார். அதன் காரணமாக வெப் சீரிஸில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.நயன்தாரா வெப் சீரீஸிலிருந்து விலகியதையடுத்து அவருக்குப் பதிலாக ஊர்வசி ரவுட்லா ஒப்பந்தம் ஆகி உள்ளாராம்.
இதுபற்றி அவர் கூறும்போது. ஒருவரின் வாழ்க்கையில் நடிப்பதென்பது மற்ற கற்பனை பாத்திரங்களில் நடிப்பதைவிடக் கடினமானது. நிஜமனிதரை திரையில் பிரதிபலிக்க வேண்டி உள்ளது. ஒருவரது வாழ்கையைப் படத்தில் கொண்டு வருவது மிகுந்த பொறுப்புமிக்கது. எனக்கு அப்படியொரு வாய்ப்பு அமைந்திருப்பதை மிகவும் த்ரில்லாக உணர்கிறேன் என்றார் ஊர்வசி ரவுட்லா.















