திகார் சிறையில் சிவக்குமாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு..

DK Shivakumarmoved Delhi High Court for bail in a money laundering case

by எஸ். எம். கணபதி, Sep 26, 2019, 15:11 PM IST

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரசில் முக்கியமானவர் டி.கே.சிவக்குமார். ஏற்கனவே சித்தராமையா முதல்வராக இருந்த போது, நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். சிவக்குமார் பெரும் தொழிலதிபர். குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் அகமது படேலை தோற்கடிப்பதற்கு பாஜக முயன்ற போது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தனது ரிசார்ட்டில் தங்க வைத்து, அகமது படேல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.

சமீபத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவரும் இதே சிவக்குமார் தான். ஆனால் அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்தது.

இந்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, டெல்லி அமலாக்கத் துறையினர் கடந்த 3ம் தேதியன்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி விட்டு இரவில் கைது செய்தனர். அவர் போலி கம்பெனிகள் நடத்தி, ரூ.200 கோடிக்கு மேல் ஹவாலா பரிமாற்றங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, சிவக்குமாரின் சார்பில் இன்று(செப்.26) டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அகமது படேல் ஆகியோர் இன்று திகார் சிறைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சிவக்குமாரை சந்தித்து சிறிது நேரம் பேசி விட்டு சென்றனர்.

You'r reading திகார் சிறையில் சிவக்குமாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை