கடைசியில் அனுமதி வழங்கினார் கேரள கவர்னர் 31ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம்

by Nishanth, Dec 26, 2020, 18:03 PM IST

கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கேரள அரசு முடிவு செய்திருந்தது. இதற்காகக் கடந்த 23ம் தேதி சிறப்பு சட்டசபையைக் கூட்டக் கேரள அமைச்சரவை கூடி முடிவு செய்தது. சட்டசபையை கூட்ட வேண்டும் என்றால் மாநில கவர்னரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

இதையடுத்து சிறப்பு சட்டசபையைக் கூட்ட கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஜனவரி 8ம் தேதி ஏற்கனவே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக சட்டசபையைக் கூட்ட என்ன அவசரம் என்று கேட்டு கவர்னர் கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பினார். அமைச்சரவை கூடி எடுத்த முடிவுக்கு கவர்னர் அனுமதி மறுத்தது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரவை முடிவை நிராகரிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி முதல்வர் பினராயி விஜயன் கவர்னருக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.எதற்காகச் சட்டசபை கூட்டப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்காததால் தான் அனுமதி மறுத்ததாக கவர்னர் ஆரிப் முகமது கான் மீண்டும் கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதி சட்டசபையைக் கூட்ட மீண்டும் அமைச்சரவை கூடி முடிவு எடுத்தது. இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி கவர்னருக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கவர்னர் மீண்டும் அனுமதி கொடுக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து கேரள சட்டத்துறை அமைச்சர் பாலன் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார் ஆகியோர் கவர்னரை சந்தித்துக் கூட்டத்தை நடத்த அனுமதி கோரினர்.

ஆனால் உடனடியாக கவர்னர் எந்த முடிவையும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று டிசம்பர் 31ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.

You'r reading கடைசியில் அனுமதி வழங்கினார் கேரள கவர்னர் 31ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை