குடும்பத் தகராறில் பயங்கரம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவன் தற்கொலை

by Nishanth, Jan 9, 2021, 16:58 PM IST

குடும்பத் தகராறில் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள கானத்தூர் என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (42). இவரது மனைவி பேபி (36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் வசிக்கும் இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளது.

எனவே வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது உண்டு. இதன் காரணமாக இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் பாதுகாப்புக்காக நாட்டு துப்பாக்கியைப் பயன்படுத்துவது உண்டு. விஜயனும் தனது வீட்டில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வைத்திருந்தார். விஜயனுக்கும், மனைவி பேபிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். விஜயனுக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வது உண்டு.

இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயன் ஆத்திரமடைந்து வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து மனைவி பேபியை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்த பேபி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது பேபி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக விரைந்து சென்று பேபியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மனைவியைச் சுட்டுக் கொன்ற விஜயனை போலீசார் தேடினர்.

இதில் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள மரத்தில் விஜயன் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மனைவியைக் கணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

You'r reading குடும்பத் தகராறில் பயங்கரம் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று கணவன் தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை