வெற்றியே வேண்டாம்.. புறக்கணிக்கப்படும் இளம் வீரர்கள்!

Dont win .. Young players who are ignored!

by Loganathan, Oct 20, 2020, 10:02 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த வெற்றி பெரிதும் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த போட்டியிலாவது சென்னை அணி பிரமிக்கவைக்குமா என்ற கேள்வியோடு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பத்தாவது போட்டியை விளையாடும் சென்னை அணிக்கு இன்னும் தொடக்க ஆட்டக்காரர் அமையாதது பெரிய வருத்தம் தான். முரளி விஜய் கடந்த சீசனில் இருந்தே சோபிக்காத பட்சத்தில் இன்னும் அவருக்கு ஏன் அணியில் வாய்ப்பு தருகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக சாம் கரண் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார். இவர் இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர், இவரையே ஓப்பனிங் ஆடச் செய்வது அணி நிர்வாகத்தின் மீதும், கேப்டன் மீதும் இன்னும் எரிச்சலை உண்டாக்குகிறது. ஆனாலும் சாம் கரண் (22) எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைமையில் தான் பேட்ஸ்மேன்களே விளையாடுகின்றனர்.

நல்லா விளையாடிக் கொண்டிருந்த பிளசில் கடைசியாக விளையாடிய போட்டிகளில் சொதப்ப ஆரம்பித்து விட்டார். சென்னை அணியின் ஒரே நம்பிக்கை இப்போதைக்கு பிளசில் தான் , ஆனால் அவரும் 10 ரன்களில் வெளியேறினார்.

பத்து போட்டிகளில் இரண்டு, மூன்று போட்டிகளைத் தவிர்த்து மற்ற எந்த போட்டியிலும் சோபிக்காத வாட்சன், நேற்றைய போட்டியிலும் 8 ரன்களில் வெளியேறினார்.இன்னும் எத்தனை வாய்ப்புகள் தான் வழங்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் TNPL போட்டிகளில் கலக்கிய ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு தர மாட்டீங்க என்ன தோனி உங்க திட்டம்.இவ்வளவு மோசமான ஆட்டத்தை எதிர்பாராத சென்னை ரசிகர்களின் நிலைமை பாவம் தான் என்று உச்சுக்கொட்டும் அளவுக்கு உள்ளது.

10வது ஓவரில் களமிறங்கிய தோனி அணியைச் சரிவில் இருந்து மீட்பார் என்ற எதிர்பார்ப்பை சள்ளி, சள்ளியா நொறுக்கி ஏமாற்றம் அளித்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட தோனி 28 ரன்களை எடுத்து அவுட்டானார்.

மறுபுறம் விளையாடிக் கொண்டிருந்த ஜடேஜா 30 பந்திற்கு 35 ரன்களை விளாசி அருமையான டெஸ்ட் இன்னிங்க்ஸை ஆடினார். இவர்களே இப்படி விளையாடிய போது ஜாதவை பற்றி என்ன சொல்வது, கடைசியில் கிடைத்த 7 பந்தில் 3 பந்தை டாட் செய்து தனது பங்களிப்பை அணிக்கு அளித்தார். இருபது ஓவர் முடிவில் சென்னை அணி தட்டுத் தடுமாறி 125/5 ரன்களை சேர்த்தது. இந்த சீசனின் குறைந்த இலக்கு இது தான். நிறையச் சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ள சென்னை அணி இந்த சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டது.

இருபது ஓவரில் 126 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இன்றும் களம் கண்டனர்.ஆனால் பந்து வீச்சில் மிரட்டிய தீபக் சஹர் பென் ஸ்டோக்ஸ்(19) மற்றும் சாம்சன் (0) இருவரையும் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். மற்றொரு பந்து வீச்சாளரான ஹேசல்வுட் தன் பங்குக்கு உத்தப்பாவை 4 ரன்களில் வீழ்த்தி, ராஜஸ்தான் அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தினார். சென்னை ரசிகர்களுக்கு இவர்களின் பந்து வீச்சு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது.

பின்னர் கைகோர்த்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை சென்னை அணியால் எவ்வளவு போராடியும் வீழ்த்த முடியவில்லை.ஒருபுறம் ஸ்மித் நிதானமாக ஆட, மறுபுறம் பட்லர் தனது அதிரடியைக் காட்டினார். இம்மாதிரியான ஆட்டத்தைச் சென்னை வீரர்கள் தர மறந்துவிட்டனர் போல. 17.3 ஓவரில் 126 ரன்களை எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் 26 ரன்களை எடுத்தார். மறுபுறம் ஆடிய பட்லர் அதிரடியாக விளையாடி 48 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் அணி.

You'r reading வெற்றியே வேண்டாம்.. புறக்கணிக்கப்படும் இளம் வீரர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை