அரையிறுதிக்குள் நுழைந்த மும்பை! பும்ராவின் புயலில் சுக்குநூறான டெல்லி!

by Loganathan, Nov 6, 2020, 11:06 AM IST

ஐபிஎல் 2020 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் தகுதி சுற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் அசத்தி விமர்சனங்களுக்கு முற்று புள்ளி கொடுப்பார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஷ்வின் வீசிய பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

வழக்கம் போல் டி- காக் உடன் சூர்ய குமார் யாதவ் கைகோர்க்க, ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. டி-காக் இந்த முறை அதிரடி பாணியை கையிலெடுக்க யாதவ் அவருக்கான வாய்ப்புகளை வழங்கி கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 25 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்கரைத் தெறிக்கவிட்ட டி-காக் 40 ரன்களை விளாசி அஷ்வின் ஓவரில் தவானிடம் கேட்ச்சாகி வெளியேறினார்.

மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் அசாதாரண கலவையில் இருந்ததால், விக்கெட் இழப்பு அவர்களின் ரன்ரேட்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் (51) மற்றும் இஷான் கிஷான் (55) இருவரும் அதிரடியாக விளையாடி தங்களின் அரைசதத்தைப் பதிவு செய்தனர். ஆனால் கேப்டன் ரோகத்தைப் போன்றே துணை கேப்டன் பொல்லார்ட் ம் டக் அவுட்டாகி அசத்தினார். பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 37 ரன்களை சேர்த்தார்.

மும்பை அணி வீரர்கள் கடைசி மூன்று ஓவரில் மட்டும் 57 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளரான அஷ்வின் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா விக்கெட் எடுக்காதது அணிக்குப் பாதகமாக முடிந்தது. டெல்லி அணிக்கு இருபது ஓவரில் 201 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒவருக்கு 10.5 ரன் ரேட் தேவைப்பட்டது. தொடர்ந்து சொதப்பி வந்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷாவை இந்த முறை தவிர்த்து இருக்கலாம் டெல்லி அணி.

கடந்த போட்டியில் அசத்திய தவான் மற்றும் ரகானா இருவரும் இந்த முறையும் அணியைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி பேட்ஸ்மேன்களான மூவரும் டக் அவுட்டாகி டெல்லியின் அரையுறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கி பெவிலியின் வந்து சேர்ந்தனர். டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் சேசிங்கில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத பட்சத்தில் இந்த முறை அதைத் தகர்த்தெறிவார் என்ற எண்ணத்தை பும்ரா ஓவரில் அவுட்டாகி அவரின் சாதனையைத் தொடர்ந்தார்.

டெல்லி அணியின் அனைத்து நம்பிக்கை நட்சத்திரங்களும் ஆட்டமிழந்த பின்பும் நம்பிக்கை அளித்து கொண்டிருந்தனர் ஸ்டேய்னஸ் மற்றும் அக்சார் பட்டேல். சிறப்பாக பந்து வீசிய ஸ்டேய்னஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி, பேட்டிங்கிலும் அசத்தினார். இக்கட்டான சூழலில் விளையாடிய ஸ்டேய்னஸ் 46 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 65 ரன்களை சேர்த்து, பும்ரா ஓவரில் போல்ட்டாகி வெளியேறினார். ஸ்டேய்னஸ் உடன் விளையாடிக் கொண்டிருந்த அக்சார் பட்டேல் தன் பங்கிற்கு 42 ரன்களை விளாசி பொல்லார்ட் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

டெல்லி அணியில் ஸ்டேய்னஸ் மற்றும் அக்சார் பட்டேல் தவிர்த்து வேறு யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை. மும்பை அணி சார்பில் பந்து வீசிய பும்ரா (4-1-14-4) நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். டெல்லி அணியின் தோல்விக்கு காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். நேற்றைய போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் பந்து வீச்சில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், டெல்லி அணியால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை.

இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த ப்ரித்வி ஷா பதில் மாற்று வீரரை பயன்படுத்தி இருக்கலாம். குறைந்தபட்சம் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கலாம். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் மும்பை அணி நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியும் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

You'r reading அரையிறுதிக்குள் நுழைந்த மும்பை! பும்ராவின் புயலில் சுக்குநூறான டெல்லி! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை