எடப்பாடி ஆட்சி கவிழும் ஸ்டாலின் மீண்டும் உறுதி

Admk government will fall soon : stalin

by எஸ். எம். கணபதி, Jun 30, 2019, 08:06 AM IST

‘இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். விரைவில் அ.திமு.க. ஆட்சி கவிழும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியுடன் பேசியுள்ளார்.


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்றிரவு(ஜூன்29) நடைபெற்றது.


இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
தலைவர் மறைந்த பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? வெற்றிடத்தை நிரப்பிட முடியுமா? என்று தொடர்ந்து சிலர் பேசினார்கள். டாக்டர்கள் பேசினார்கள். பெரிய டாக்டர்(ராமதாஸ்) சொன்னார், சின்ன டாக்டரும்(அன்புமணி) சொன்னார், டாக்டர் அம்மாவும்(தமிழிசை) சொன்னார். இந்த தேர்தலோடு திமுக அழிந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால், என்ன நடந்தது? அவர்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது.


தலைவர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எனக்கு பதற்றம் இருந்தது உண்மைதான். ஆனாலும் மக்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. தேர்தலின் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அந்த முழக்கம் வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள், ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாதபடி 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அந்த வெற்றியை பெற முடியவில்லையே என்று நம்மை விமர்சனம் செய்கிறார்கள். திமுக தோழர்களிடத்திலும் அந்த சோர்வு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. கவலைப்படாதீர்கள். இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதில் என்னென்ன நடக்கப்போகிறதோ என்பதை யாமறியேன் பராபரமே!
இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் தான் இந்த ஆட்சிக்கு ஆயுள் இருக்கிறது. ஆயுள் முடிந்து ஆட்சிமாற்றமா? ஆயுள் முடிவதற்குள் ஆட்சி மாற்றமா? என்று ஒரு கேள்விக்குறி தொடர்ந்து இருக்கிறது. எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி. விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பது உண்மை, அதை யாரும் மறுத்திட முடியாது.
நம் தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்ததே. ஒட்டுமொத்த மக்களின் வழக்கறிஞர்களாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததை பார்த்து பிரதமரே மனம் திறந்து பாராட்டி பேசவில்லையா? மும்மொழி திட்டத்தை அறிவித்ததும் நாம் உடனே அதை கண்டித்தோம். அதற்கு பிறகு அது வாபஸ் பெறப்பட்டது. தென்னக ரயில்வேயில் இனி தமிழில் பேசக்கூடாது, இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் தான் பேச வேண்டும் என்று சுற்றறிக்கை வந்தது. அடுத்த வினாடியே தென்னக ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட உத்தரவிட்டேன். உடனே தயாநிதி மாறன் தலைமையில் முற்றுகையிட்டார்கள். அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே? போதுமா? இன்னும் வேண்டுமா?


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் அதனை எதிர்த்து குரல் எழுப்புவார்கள், அந்த குரலுக்கு மதிப்பு இல்லையென்று சொன்னால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கிற சூழ்நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.
அதிமுக ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. இவர்கள் கவலையெல்லாம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதாகவே இருந்தது. இப்போது சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதனால் எந்த எம்.எல்.ஏ. நம்மிடம் இருப்பார், எந்த எம்.எல்.ஏ. நம்மை விட்டு தாவுவார் என்பதை கண்காணிப்பதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒற்றர்களை காவலுக்கு வைத்திருக்கிறார்கள். அந்த ஒற்றர்களுக்கே நாங்கள் ஒற்றர்களை வைத்திருக்கிறோம். இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். அவர்களை மக்கள் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித்தருவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

You'r reading எடப்பாடி ஆட்சி கவிழும் ஸ்டாலின் மீண்டும் உறுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை