ஸ்டீவ் ஜாப்ஸின் அமைதிப் புரட்சி.... ஆப்பிள்

ஆப்பிள் ஐ-போன் வரலாறு

Sep 28, 2017, 07:00 AM IST

ஸ்டீவன் பவுல் ஜாப்ஸ்...

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார். பெற்றோரின் வறுமை காரணமாக ஒரு அமெரிக்க தம்பதியிக்கு வளர்ப்பு மகனாக தத்துக் கொடுக்கப்பட்டார். புத்த மதத்தை பின்பற்றினார். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர் அனுபவத்தால் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

1976ஆம் வருடம் ஏப்ரல் முதல் நாள், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார்.

Image result for apple steve jobs

ஸ்டிவ் பல நேரங்களில் மன அமைதிக்காக ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவரது முதல் காதலும் அங்கே அரங்கேறிய காரணத்தால் தனது நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயரிட்டு அழகு படுத்தினார்.

இந்நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐ-பாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர் தான் இந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.

1977ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆப்பிள் 2 கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது.

1980-ல் ஆப்பிள் நிறுவனத்தை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது. 1985ஆம் ஆண்டு நிறுவன முதலாளிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆப்பிளில் இருந்து வெளியேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, "நெக்ஸ்ட்' மற்றும் "பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினார், "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி” உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது.

அவர் ஆப்பிளில் இல்லாத நேரத்தில் 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனம் நியூட்டன் மெசேஜ் பேட் என்ற மினி மொபைல் சாதனத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே இந்த சாதனத்தின் விற்பனையை நிறுத்திவிட்டது.

காரணம், இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருந்தது, சந்தையில் எல்லோருடைய கவனத்தையும் நியூட்டன் ஈர்த்தது.

ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள் இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.

சில காலம் கழித்து 1996ல் ஆப்பிள் நிறுவனம், “நெக்ஸ்ட்டை” வாங்கியது. அவர் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தார். ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஏற்றுக்கொண்டதும் அவர் செய்த முதல் வேலை நியூட்டனை இழுத்து மூடியதுதான்.

நியூட்டன் அனுபவத்தில் இருந்து தெளிவான பாடங்கள் கற்றுக்கொண்டு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட், அதைத் தொடர்ந்து தொலைநோக்கான திட்டங்களுடன், சீரான இடைவேளையில் ஒன்றன் பின் ஒன்றாக ஆப்பிள் வெளியிட்ட மொபைல் போன்கள், ஆப்பிளின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

அதற்கு இடைப்பட்ட காலத்தில், ஆப்பில் நிறுவனம் மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது. அதன் தயாரிப்புகள் எதுவும் மக்களை திருப்தி படுத்தவில்லை. அந்நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கியது. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது, ஆப்பிளின் பரம எதிரி என கருதப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம்.!

கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு வேலையை பில் கேட்ஸ் செய்தார். ஓட்டளிப்பு உரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைகேரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமல் இருந்ததுதான்.)

அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை. ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு நிலைமை அப்படியே தலைகீழானது.

2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். ஐபோன், ஐ-பாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!

பில்கேட்ஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக அமெரிக்காவே விமர்சித்தது. ஸ்டீவ் ஜாப்ஸை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.

கூகுளுக்கும் ஆப்பிளுக்கும் கடும் வர்த்தகப் போர் நடந்தாலும், கூகுளின் சிஇஓவாக இருக்குமாறு இவரை கேட்டுக் கொண்டது கூகுள் நிர்வாகம். ஆனால், அதை நாசூக்காக மறுத்துவிட்டார் ஸ்டீவ்.

இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான ஸ்டீவ் ஜாப்ஸ் இப்போது நம்மோடு இல்லை. 2011 ஆகஸ்ட் 24 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

கணைய புற்றுநோய் காரணமாக 2011 அக்டோபர் 6 அன்று அவர் இந்த உலகை விட்டு மறைந்தார்.

"எனக்கு கணையப் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போது, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால் நான் தேவையில்லாமல் அதைத் தள்ளிப் போட்டு விட்டேன். இணையதளத்தில் பார்த்த மூலிகை மருத்துவம், உணவுக் கட்டு்பபாடு, அக்குபங்சர் உள்ளிட்டவற்றை நான் பரிசோதித்துப் பார்த்தேன். இதனால் காலதாமதமாகி கட்டி பெரிதாகி விட்டது. ஒருகட்டத்தில் ஒரு மனநல மருத்துவரைக்க கூட சந்தித்தேன் என்றால் எனது அறியாமையை புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு டாக்டரிடம் போனபோது, நிறைய ஜூஸ் குடித்தால் சரியாகி விடும் என்றார். இன்னும் நிறைய வழிகளைக் கூறினார். எல்லாம் தோல்வியாகி விட்டது. கடைசியாக 2004ம் ஆண்டுதான் அறுவைச் சிகிச்சைக்குப் போனேன்.

நான் அதுவரை அறுவை சிகிச்சையை புறக்கணித்ததன் காரணம், எனக்கு எனது உடலை அறுவைச் சிகிச்சை செய்து இன்னொருவர் பார்ப்பது பிடிக்கவில்லை. இதனால்தான் உலகில் உள்ள பிற வழிகளையெல்லாம் சோதித்துப் பார்க்க விரும்பினேன். கடையில் எனக்குப் பிடிக்காததுதான் நடந்தது. ஆனால் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். அதற்காக இப்போது வருந்துகிறேன்" என்று தன் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் தன்னைப்பற்றி வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஜாப்ஸ்.

அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் என்பவர் கூறுகையில், "ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்."

"ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார். அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் அவர் சார்ந்த துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது" என்கிறார் டாக்டர் ஆர்னிஷ்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, இந்த நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம்.

கடுமையான விதிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதற்காக எல்லாரிடமும் கறாராக இருப்பார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் சுமார் 300 தயாரிப்புகளுக்கு தன் பெயரில் காப்புரிமை கொண்டுள்ளார். ஆப்பிள் ஸ்டோர்களில் உள்ள கண்ணாடி படிக்கட்டுகளுக்கு கூட காப்புரிமை வைத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனங்கள் வெளியிடக்கூடிய ஐபோன் விளம்பர போஸ்டர்களில் ஐபோனில் உள்ள கடிகாரம் 9.41 என்ற நேரத்தை காட்டும். ஏனெனில் அது ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நேரம்.

2007-ம் ஆண்டு வெளியான முதல் ஐபோன் அந்த ஆண்டு வெளியான டைம்ஸ் பத்திரிக்கையின் சிறந்த கண்டுபிடிப்பு விருதை வென்றது.

2012-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3,40,000 ஐபோன்கள் விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்தது

தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 100 டர்ட்டில் நெக் ஸ்வெட்டர்கள் வைத்திருந்தார். தினமும் என்ன அணிவது என்று யோசித்து நேரத்தை வீணாக்காமல் இருக்க அவர் இப்படி செய்தாராம். ஸ்டீவ் மறைவுக்கு தனது ஹோம் பேஜிலேயே இரங்கல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்.

ஆப்பிளின் வரலாற்றை "ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முன்- 'ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பின்" என எழுத வேண்டிய கட்டாயத்திற்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. காரணம், ஸ்டீவ் ஜாப்ஸ் அதன் தலைவராக இருந்தவரை குறிப்பிடத்தக்க புதுமைகளையும், சிலிர்க்கவைக்கும் பயனீட்டு அனுபவங்களை ஆப்பிள் சாதனங்களில் நிரப்பிக்கொடுக்கும் வித்தைக்காரராக இருந்தார்.

ஆனால், கடந்த சில வருடங்களாக ஆப்பிளின் புதிய வெளியீடுகளைப் பார்க்கும்போது வெறுப்பே தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் சாதனங்களில் மிகச் சிறிய மேம்பாடுகளைக் கொண்டுவந்து, அவற்றைச் சந்தைப்படுத்தி, பணம் ஈட்டுவதில் மட்டுமே ஆப்பிள் கவனமாக இருக்கிறதோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

2014 வெளியீடான 'iPhone 6 Plus சாதனத்தை பாக்கெட்டில் வைத்து அமர்ந்தால் வளைந்துவிடுகிறது என பல புகார்கள் எழுந்தபோது, பல நாட்களுக்குப் பின்னரும் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை ஆப்பிள். கடைசியில் 'அப்படியெல்லாம் வளைவது மிகவும் அரிது என ஸ்டேட்மென்ட் மட்டும் விட்டிருந்தது ஆப்பிள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அதன் தலைவராக இருந்தபோது நடந்த சம்பவத்தை இதோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிமானால், 2011ம் ஆண்டு ஐபோன் 4 வெளியான போது நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துவது இதற்கு பொருத்தமாக இருக்கும்.

'ஐபோன் 4 சாதனத்தைப் பயன்படுத்தி பேசும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்ற புகார் எழுந்தது. அந்த சமயம் குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த ஜாப்ஸ், உடனடியாக கலிஃபோர்னியா வந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், 'எல்லா போன்களையும் போலவே ஐபோனிலும் சிக்னல் ட்ராப் ஆகலாம் என்பதை செய்முறை விளக்கமாகப் புரியவைத்ததுடன், 'அலைபேசியின் மீது அணிந்துகொள்ளும் வகையில் ஆன்டனா ஒன்றை ஆப்பிள் இலவசமாகக் கொடுக்கும் எனவும் அறிவித்தார். ஆப்பிளின் அந்த "மக்கள் அபிமானம்" இப்போது இல்லாதது பெரும் குறையே.!

ஆப்பிள் ஐபோன் வாங்கி என்னதான் முறையாகப் பராமரித்தாலும், ஒன்று இரண்டு வருடங்களில் காரணமே இல்லாமல் பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிடும், அடிக்கடி ஹேங் ஆகும். ஜாக்கிசான் போல துள்ளிக்குதிக்கும் அப்ளிகேஷன்கள், நாளடைவில் மிக மெதுவாகத் திறக்கும். சில அப்ளிகேஷன்கள் வேலையே செய்யாது. ஆப்பிள் போன்களை சர்வீஸ் செய்ய முடியாது என்பதால் புதிய போன்தான் வாங்க வேண்டும். காரணம் என்னவென்றால் ஆப்பிளின் லேட்டஸ்ட் மென்பொருட்கள் பழைய போன்களுக்கு செட் ஆகாது.

ஆப்பிளின் லேட்டஸ்ட் இயங்கு மென்பொருள் ஐ.ஓ.எஸ்-8. இதை ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்ய முடியாது. ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களை வைத்திருப்பவர்கள்தான் அப்டேட் செய்ய முடியும். அதனால், ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் வேறு வழியே இல்லாமல், ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களைத்தான் வாங்க வேண்டும். ஆக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஆப்பிள் உண்டாக்குகிறது.

இன்னொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், முதல் தலைமுறை ஐபோன் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டது, ஆப்பிள் சாதனங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவதால் பல வருடங்களுக்கு முன்பு இருந்த சாதனங்கள் உடைந்துவிடாமல் உறுதியான வடிவிலேயே இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தொடர்ந்து வெளியிடும் iOS இயங்கு மென்பொருள் பழைய சாதனங்களின் இயக்கத்தை வெகுவாகப் பாதித்து, முயல் வேகத்தில் இருக்கும் அலைபேசி செயல்பாட்டை ஆமை வேகத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறது.

புதிய சாதனங்களில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்தால் தான் பயனீட்டாளர்கள் இயல்பாகவே புதிய சாதனங்களுக்குச் செல்வார்கள். ஆனால் புதிய சாதனங்களில் மிகச் சில மேம்பாடுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் தங்களது பழைய சாதனங்களைத்தான் தொடர்ந்து பயன்படுத்த விரும்புவார்கள்.

ஆனால், பழைய சாதனங்களை 'எக்ஸ்சேஞ்ச் முறையில் பெற்றுக்கொண்டு புது சாதனங்களை விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறது தற்போதைய ஆப்பிள் நிறுவனம்.
இதுவரை மொத்தம் விற்பனையான ஐபோன்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டது.

ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் சாதனங்களே மிக அதிகமாக இயங்கி வருகின்றன. அது உலக அளவில் 84.7% ஆக உள்ளது. ஐ.ஓ.எஸ். 11.7%, விண்டோஸ் போன் 2.5% ஆக உள்ளன.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்மார்ட் போன் விற்பனையில் அதிக லாபம் ஈட்டுவது ஆப்பிள் போன்களே. இன்றைய சூழ்நிலையைச் சமாளித்து, விற்பனையில் முதல் இடம் பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தன் விற்பனைக் கொள்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதுள்ளது.

அதிக மொபைல் போன்களை பயன்படுத்தும் ஆசிய, பசிபிக் நாடுகளில், விலை குறைந்த ஆண்ட்ராய்ட மாடல்கள் பெருகி வருகின்றன. இவற்றுடன், அதிக விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

அது போல, ஆப்பிள் தனது கணக்கில் பில்லியன்களை சேமித்து வைத்திருந்தாலும்,
அதன் பொருட்கள் இன்றும் விரும்பியே வாங்கப்பட்டாலும், புதுமை படுத்துதலின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால், 'ஆப்பிள் என்று ஒரு நிறுவனம் இருந்தது என இன்றைய சந்ததியினர், இனி வரும் சந்ததியினருக்கு சொல்ல வேண்டிய நிலைக்கு அது தள்ளப்படும்

அது ஸ்டீவ் ஜாப்ஸின் புகழை கெடுப்பதாகவே அமைந்துவிடும்..

You'r reading ஸ்டீவ் ஜாப்ஸின் அமைதிப் புரட்சி.... ஆப்பிள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை