65 வயதுக்கு மேல், 15 வயதுக்கு குறைவான நபர்கள், பெண்கள் போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை

by Nishanth, Nov 10, 2020, 13:36 PM IST

காவல் துறையை பொதுமக்களின் நண்பனாக்க பல புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி 65 வயதுக்கு மேல் ஆன மற்றும் 15 வயதுக்கு குறைவான நபர்கள், பெண்கள் ஆகியோரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைக்க கூடாது. காலம் எவ்வளவு தான் மாறிவிட்டாலும் போலீஸ் நிலையம் என்றாலே பலருக்கும் கதிகலங்கும். விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறினால் பலருக்கும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். சமீபத்தில் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற தந்தையும், மகனும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நாளுக்கு நாள் போலீஸ் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பது எழுத்தில் மட்டும் தான் இருக்கிறதே தவிர அதை போலீசார் செயலில் காட்டுவதில்லை.

விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை போலீசார் கொடுமைப்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போலீசாருக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதால் காவல்துறை மீதான பொது மக்களுக்கு உள்ள அச்சத்தை மாற்றும் வகையில் பல புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை சார்பில் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஒருவருக்கு எதிராக புகார் கிடைத்தால் இடம், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு நோட்டீஸ் கொடுக்காமல் யாரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தக் கூடாது. பெண்கள், 65 வயதுக்கு மேல் ஆன மற்றும்15 வயதுக்கு குறைவான நபர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்காமல் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்படுபவர்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கஸ்டடியில் வைத்திருக்கக் கூடாது. கஸ்டடியில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளிலும், லாக்கப்பிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கஸ்டடியில் உள்ள நபர்களை கொடுமைப்படுத்தும் போலீசாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் ஆஜராக மறுத்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும். குற்றங்கள் அதிகரிக்காமல் இருப்பதை தடுப்பதற்கும், சரியான விசாரணையை உறுதி செய்யவும், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் மிரட்டாமல் இருப்பதற்காகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும். கைது மெமோ தெளிவாக எழுதி தயாரிக்கப்பட்டு அதில் அப்பகுதியை சேர்ந்த ஒரு முக்கிய நபரின் சாட்சி கையெழுத்தும் இருக்க வேண்டும். கைது செய்யப்படுகின்ற நபரின் விருப்பத்தின்படி அவருக்கு தெரிந்த ஒருவரிடம் விவரத்தை தெரிவிக்க வேண்டும். கைது செய்யும் அதிகாரியுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் போலீசார் இருக்க வேண்டும். கைதாகும் விவரம் அனைவருக்கும் தெரியும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குறித்தும், எந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திலும் கைது குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஜாமீன் இல்லாத மற்றும் மோசமான குற்றங்களில் கைது செய்யப்படுவர்களின் மட்டுமே கையில் விலங்கு அணிவிக்க வேண்டும். பெண்களை கைது செய்யும்போது பெண் போலீஸ் இல்லாவிட்டால் அவருடன் அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். கஸ்டடியில் இருக்கும்போது வக்கீலை அணுக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

தேவைப்பட்டால் இலவச சட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 48 மணி நேரத்திலும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவேளை நேரங்களில் குடிநீரும், உணவும் கொடுக்க வேண்டும். உடல் ரீதியாக கொடுமைப்படுத்தாமல் விசாரணை நடத்த வேண்டும். தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக உள்ளாடைகள் உள்பட தூய்மையான உடைகளை தினமும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 65 வயதுக்கு மேல், 15 வயதுக்கு குறைவான நபர்கள், பெண்கள் போலீஸ் நிலையம் செல்ல தேவையில்லை Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை