நாடாளுமன்ற தாக்குதல் போல அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? கண்காணிப்பு தீவிரம்

by Nishanth, Jan 29, 2021, 13:50 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிருப்தியில் இருக்கும் சிலர் அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலைப் போல மீண்டும் அங்கு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மிகத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அமெரிக்கா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் தோல்வி அடைந்ததை டிரம்பால் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய தோல்வி உறுதியான பின்னரும் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். டிரம்பின் ஆதரவாளர்களாலும் தங்களது தலைவரின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போதே அமெரிக்காவில் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்று பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால் அமெரிக்கா முழுவதும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே கடந்த ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட மோசமாக அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிடல் டவரில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மும்மரமாக இருந்தனர். அப்போது தான் அந்த கட்டிடத்தின் மீது டிரம்பின் ஆதரவாளர்கள் திடீரென கடுமையான தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு முன்னர் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடிய தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பேச்சுக்கள் தான் அவரது ஆதரவாளர்களை கலவரத்திற்கு தூண்டியது. அமெரிக்க அதிபர் தேர்தல் திருடப்பட்டு விட்டது.

இதை எதிர்த்து நீங்கள் கடுமையாக போராடவில்லை என்றால் அதற்கு மேல் உங்களுக்கு அமெரிக்கா என்ற நாடே இருக்காது என்று பேசினார். டிரம்பின் இந்த பேச்சைக் கேட்ட பின்னர் தான் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வரலாறு காணாத கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வீரர்களையும் கடந்து அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்தனர். இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவலர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், இதில் இதுவரை 155 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடும் பரபரப்புக்கு இடையே கடந்த வாரம் ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் ஒரு சில வாரங்களில் மீண்டும் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இரு தினங்களுக்கு முன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில தவறான எண்ணங்கள் காரணமாகவும், குறிப்பிட்ட சில சித்தாந்த ரீதியாக ஊக்கப்படுத்தப் பட்டவர்கள், அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் பதவி கை மாறப்பட்டதற்கு எதிராகவும் தாக்குதலில் ஈடுபடலாம் என்று அந்த ரகசிய தகவலில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய மோசமான குறிக்கோளில் மிகத் தீவிரமாக இருக்கும் சில ஆபத்தான நபர்கள் சமீபத்தில் நடத்திய நாடாளுமன்ற கட்டிடத் தாக்குதல் போலவே, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்குவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் வெறுப்படைந்திருக்கும் சில தனிநபர்கள் மூலம் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது, அந்த தாக்குதல் எப்படி, எப்போது நடக்கும் போன்ற தகவல்கள் அதில் இல்லை. இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் டெலிகிராமில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மிகவும் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறுகிறது. ஆனால் அவர்கள் தேசபக்தர்கள் என்றும், அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றும் அமெரிக்க கிராமப்புறங்களில் கருதுகின்றனர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வலதுசாரி அமைப்பை சேர்ந்த பலருக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தற்போது இன்னொரு சமூக இணையதளமான டெலிகிராமில் நுழைந்துள்ளனர். கேப்பிடல் டவரில் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் நம்முடைய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் என்றும், அவர்கள் நம்முடைய கதாநாயகர்கள் என்றும் டெலிகிராமில் போற்றப்படுகின்றனர். டெலிகிராமில் தற்போது உள்ள இந்த குழுக்களின் கருத்துக்கள், பேச்சுக்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கருதுகிறது. சில பதிவுகள் மிகுந்த வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளன. பெரும்பாலும் டிரம்பின் ஆதரவாளர்கள் தான் இந்தக் குழுக்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தங்களது தலைவரான டிரம்ப் தான் இப்போதும் அமெரிக்க அதிபராக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

You'r reading நாடாளுமன்ற தாக்குதல் போல அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? கண்காணிப்பு தீவிரம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை