கேப்டன் கோஹ்லி திரும்ப வந்தார் இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி

by Nishanth, Feb 9, 2021, 17:47 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற சரித்திர வெற்றியை மறக்கடிக்கும் வகையில் அமைந்து விட்டது சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு இன்று கிடைத்த மாபெரும் தோல்வி கோஹ்லியின் தலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வி கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கங்காருவின் நாட்டில் கிடைத்த சரித்திர வெற்றி.கடந்த ஜனவரி 19ம் தேதி தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா சரித்திர வெற்றி பெற்றது.

காபா மைதானத்தில் எங்களை வெல்ல ஆளே கிடையாது என்று மார்தட்டி வந்த ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்த வெற்றி கிடைத்த சரியாக 20 நாட்களுக்குப் பின்னர் இந்தியாவுக்கு இங்கிலாந்தின் மூலம் மரண அடி கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்று இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. சொந்த மண்ணில் கிடைத்துள்ள இந்த தோல்வி இந்திய அணிக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.



ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த பெரும் தோல்விக்குப் பின்னர் தான் இந்தியா மீண்டு வந்தது. அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த போட்டியில் 2வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டி வரலாற்றில் இது தான் இந்தியாவின் மிகவும் குறைந்த ரன்கள் ஆகும். முதல் டெஸ்டில் கிடைத்த இந்த தோல்விக்கு பின்னர் கேப்டன் கோஹ்லி ஊருக்கு திரும்பினார். பின்னர் கேப்டனாக பொறுப்பேற்ற ரகானேவின் தலைமையில் 2-வது டெஸ்ட் போட்டியிலும், பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்றது.

சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தியா டிரா செய்தது. இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் முக்கிய வீரர்கள் பலர் காயமடைந்த நிலையில் புதுமுக வீரர்களை வைத்து ஒரு தொடரை வெற்றி பெற்றது அது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரும், இஷாந்த் சர்மாவும் காயம் காரணமாக விலகி விட்டனர். முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் முகமது ஷமி காயமடைந்து வெளியேறினார்.2வது டெஸ்ட் முடிந்த போது உமேஷ் யாதவும், கே.எல். ராகுலும் வெளியேறினர். 3வது டெஸ்ட் முடிந்த போது அஷ்வின், ஹனுமா விஹாரி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயமடைந்து வெளியேறினர். இத்தனை முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் கடைசி டெஸ்டில் இந்தியாவால் சரித்திர வெற்றி பெற முடிந்தது.

கேப்டன் கோஹ்லியின் தலைமையில் தற்போது இந்தியாவுக்குத் தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டியில் தோல்வி கிடைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இதற்கு முன்பு இந்தியா தோல்வி அடைந்திருந்தது. இதற்கிடையே நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ரகானேவின் தலைமையில் இந்தியா தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017க்குப் பின்னர் முதன் முதலாகத் தான் இந்தியா சொந்த நாட்டில் தற்போது ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.2017 பிப்ரவரியில் பூனாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பின்னர் தற்போது இங்கிலாந்துக்கு எதிராகச் சென்னையில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 35 வருடங்களுக்கு இடையில் சென்னையில் நடந்த போட்டிகளில் இந்தியா முதன்முதலாக இங்கிலாந்துடன் தோல்வி அடைந்துள்ளது.

1990க்குப் பின்னர் தற்போது முதன் முதலாகத் தான் இந்தியா சென்னையில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ரகானேவை கேப்டனாக்க வேண்டும்இங்கிலாந்துக்கு எதிராகக் கிடைத்துள்ள இந்த தோல்வியைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோஹ்லியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது. ரகானேவை கேப்டனாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் எனக் கருதப்படுகிறது. ரகானே இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இதில் எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4 டெஸ்ட் போட்டியில் வெற்றியும், ஒரு டெஸ்ட் போட்டி டிராவும் ஆகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த படுதோல்விக்கு பின்னர் வீரர்களுக்கு ஊக்கம் அளித்து, 2வது டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரகானேவை கேப்டனாக்க வேண்டும் என்று தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இனி அந்த கோரிக்கை மேலும் வலுப்பெறும்.இந்த தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்பது தான் இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் குறிக்கோளாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 3-0, 3-1, 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்தால் இறுதிப் போட்டியில் நுழைய முடியும்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று விட்டதால் தற்போது இங்கிலாந்துக்குத் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 30 புள்ளிகள் கிடைத்துள்ள இங்கிலாந்து அணி புள்ளிகள் போட்டியில் முதன்முதலாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்த தொடர் சமநிலையில் முடிந்தால் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் நுழைந்து விடும். ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

You'r reading கேப்டன் கோஹ்லி திரும்ப வந்தார் இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை