டிவி ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் மரணம்: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் சாலினியை தொடர்ந்து, ஒளிப்பதவாளர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘மாலை முரசு’ தொலைக்காட்சி நிருபர் சாலினி மற்றும் சிலர் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, மதுரை - திண்டுக்கல் சாலையில், பொட்டிகுளம் அருகே கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக 16.7.2018 அன்று மூன்று லட்சம் ரூபாய் நிவாரணத்தை உடனடியாக அறிவித்திருந்தேன்.

இந்தநிலையில், நிருபர் சாலினியுடன் காரில் பயணம் செய்த ‘மாலை முரசு’ தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் டி.சதீஷ்குமார் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 24.7.2018 அன்று இரவு உயிர் இழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

சதீஷ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், ‘மாலை முரசு’ தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சதீஷ்குமாரின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.