உலகுக்கு நீங்களே கை விளக்கு! - ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

Sep 5, 2018, 13:46 PM IST

செப்டம்பர் ஐந்து..
கல்விக்கூட ஆலயத்தில்
எழுத்தறிவித்த இறைவன்களை
நினைவுகூறும் திருநாள்..
அறிவின் திறவு கோலாம்
ஆசிரியர் தின நாள்!

ஆசிரியர்களே.. எங்கள் ஆசான்களே..
நீங்கள் உருவில்
எம்மைப் போல மனிதர்கள்தான்
என்றாலும்,
காலத்தால் அழியாத
கல்வி தருவதால்
நிலத்தில் நீங்கள் என்றும்
புனிதர்கள்தான்!

கருவறை சுமந்த அம்மா
உயிர் தந்தாள்..
தோள்கள் வலிக்கும் வரை
சுமந்த அப்பா
அன்பு தந்தார்..
ஆனாலும்
வகுப்பறையில் சுமந்த
நீங்களன்றோ
ஏற்றம் தந்தீர்..
உலகையே அறிவால்
வென்று சாதிக்கிற
ஆற்றல் தந்தீர்..!

நீங்கள்
வகுப்பறை எனும்
அறிவு விளைவிக்கிற
நிலந்தனில்
பாட நூல் ஏர்ப் பூட்டி
சீருடைப் பயிர் வளர்த்தீர்..
வளர்த்த பயிர்களில்
சோடைனெ்று எதுவுமில்லை..
வகுப்பறைத் தேர்வில்
மட்டுமல்ல..
வாழ்க்கைத் தேர்வுகளிலும் அவர்
தோல்வி கண்டு
வாடவில்லை..!

ஆம் ஆசிரியர்களே..
மருத்துவர்கள்
பொறியாளர்கள்
கவிஞர்கள்
ஓவியர்கள் என
நீங்கள்
ஊன்றிய கல்வியெனும்
வீரிய வித்துக்களால்
முப்போக விளைச்சல்
அமோகமாய்..
அதனால்தானே
குடிசையும் உள்ளது
கல்வியின் மீது
பெரும் மோகமாய்!

ஆசிரியர்களே..
நாங்கள்
வெறும் நிலவுதான்..
நீங்களோ சூரியன்
அறிவு ஒளிதந்து
இருளாய் மூழ்கிப் போகாது..
பௌர்ணமியாய்
மாணவர்களை
பிரகாசமாயிருக்க
வைக்கிறீர்..!

ஆசிரியர்களே..
நீங்களும் காற்றும்
ஒரே வகை..
அதனாலன்றோ
சாதி, மதம்
ஏழை, பணக்காரர்
வித்தியாசம் பாராமல்
எல்லோருக்குமான
சுவாசமாய் இருக்கிறீர்
அதிகாரங்களுக்கு அஞ்சாது
நீதி தேவதையெனும்
மனச் சாட்சிக்கு மட்டுமே
விசுவாசமாய் இருக்கிறீர்!

ஆசிரியர்களே
நீங்கள்
நெருப்பைப் போல..
இருளை வெளுத்து
வெளிச்சம் தரவும்,
அறியாமை கொளுத்தி
புரிதல் புகட்டவும் நீங்களே
உலகுக்கு கை விளக்கு
மாணவர் உயர்வே
உங்கள் இலக்கு!

ஆம் ஆசிரியர்களே..
இந் நாள் மட்டுமல்ல..
இனி
தினந்தோறும் உங்கள்
தியாகம் போற்றிடுவோம்..
உங்கள்
புகழ்க் கொடியை
மாணவர் பெற்றோர்
இதயங்கள் தோறும்
ஏற்றிடுவோம்!

- அல்லிநகரம் தாமோதரன்

You'r reading உலகுக்கு நீங்களே கை விளக்கு! - ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை