அபார வெற்றி... மீண்டும் தொடர்கிறது இந்தியாவின் சாதனை!

by Suresh, Dec 23, 2017, 00:22 AM IST

கபில்தேவ் காலத்திலிருந்து டோனியின் கேப்டன்ஷிப் காலம் வரைக்கும் இந்திய அணி படைத்த அனைத்து ரெக்கார்டுகளையும் தூசி தட்டி எடுத்து வையுங்கள், அவை அனைத்தையும் அடித்து நொறுக்குகிறோம் என்று, வீரு கொண்டு எழும்பியுள்ளது விராட் கோலியின் இளைஞர் அணி.

விராட் கோலிக்கு நானும் சளைத்தவன் அல்ல என்பது போல், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தனது கேப்டன்ஷிப்பில் தனி ஆளாக போராடி பல சாதனைகளை படைத்து வருகிறார் ரோஹித் சர்மா...

நிகழ்கால இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்வது சாதாரணமாகி விட்டது என்றே சொல்லலாம்... அவ்வாறான போட்டிதான் இது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-டுவெண்டி கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோஹித் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார், பின்னர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தையும் தாண்டி, நாலாபுறமும் வான வேடிக்கை காட்டினார். 35 பந்துகளில் தனது இரண்டாவது டி-ட்வெண்டி சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார்.

ரோஹித்தின் வேகத்தை பார்க்கும்போது 20 ஓவர் போட்டியில் 200 ரன்கள் குவித்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக 13-வது ஓவரில் (43 பந்துகளில்) 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 12 பௌண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். எட்டு ஓவர்கள் முடியும்போது இந்திய அணி 87 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 40(26), ரோஹித் 47(22) ரன்கள் அடித்திருந்தனர். ரோஹித் ஆட்டமிழந்த 13வது ஓவரில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 46 (33) ரோஹித் சர்மா 118 (35) ரன்கள் அடித்திருந்தனர். அதாவது, அடுத்த 5 ஓவரில் இந்திய அணிக்கு 78 ரன்கள் கிடைத்தது. அதில் 72 ரன்கள் ரோஹித் என்ற தனி ஒருவனால் அடிக்கப்பட்டது. ரோஹித்தின் பேட்டில் பந்து பட்டாலே ஆறு ரன்கள் வந்துகொண்டிருந்தது. இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் சாதனையும் இன்று நிகழ்த்தப்பட்டது. ரோஹித்- ராகுல் ஜோடி குவித்த 165(86) ரன்கள் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் மூன்றாவது இத்தையும் பிடித்துள்ளது. அதன் பிறகு களமிறங்கிய டோனி, மற்றும் ராகுல் கூட்டணி அணியின் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ராகுல் 35 பந்துகளில் அரை சதத்தை கடந்தார், மேலும் சிறப்பாக விளையாடிய நிலையில் 89 ரன்களில் ஆட்டமிழந்தார், அதில் 5 பௌண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும்.

ராகுல் ஆட்டமிழந்த பிறகு டோனி 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் அடிக்கப்பட்ட 260 ரன்களானது, இந்தியாவின் அதிகபட்ச ரன்கள்களாகும். இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக 21 சிக்ஸர்களையும், 21 பௌண்டரிகளையும் விளாசியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 210 ரன்கள், பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பியதன் மூலம் கிடைத்த ரன்களாகும்.

அதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணி முதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உப்புல் தரங்கா மற்றும் குஷல் பெரேரா ஆட்டமிழக்கும் வரை ரன்ரேட் பத்துக்கு மேலேயே இருந்தது, அதனால் இலங்கை வெல்ல ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் கூட்டணி, பந்துவீச்சின்போது தசை பிடிப்பால் வெளியேறிய மேத்யூஸை தவிர, இலங்கையின் கடைசி வீரர் வரை அனைவரையும் உள்ளே வரவைத்து அடுத்தடுத்து வெளியே அனுப்பினார்கள்.

முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தால் இலங்கை அணியால் நிலையான பேட்டிங்கை கொடுக்க முடியவில்லை. இலங்கை கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 27 ரன்களுக்குள் இழந்தது, கடந்த போட்டியில் கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 48 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சஹால் 4 விக்கெட்களையும், குல்தீப் 3 விக்கெட்களையும் கைப்பற்றி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது, தொடரையும் கைப்பற்றியது. 118 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

You'r reading அபார வெற்றி... மீண்டும் தொடர்கிறது இந்தியாவின் சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை