இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யுமா தென் ஆப்பிரிக்கா - 241 ரன்கள் இலக்கு

ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 241 ரன்களை இலக்காக தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்தியா அணி நிர்ணயம் செய்துள்ளது.

Jan 26, 2018, 22:20 PM IST

ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 241 ரன்களை இலக்காக தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்தியா அணி நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கடந்த போட்டிகளை போலவே, இந்த போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பினர். கே.எல்.ராகுல் 7 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகினார். தொடர்ந்து தொடக்க வீரர் முரளி விஜய் 8 ரன்களில் வெளியேற 13 ரன்களுக்கு 2 விக்கெட் என்றானது.

பின்னர் 101 பந்துகளில் அரைச்சதம் கடந்த விராட் கோலி 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய ரஹானே 9 ரன்களில் வெளியேறினார். 179 பந்துகளில் தான் புஜாரா அரைச்சதம் அடித்தார். அடித்த வேகத்தில் புஜாரா வெளியேறினார்.

அப்போது அணியின் எண்ணிக்கை 144 ரன்கள் ஆக இருந்தது. மேற்கொண்ட 43 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 187 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. குறிப்பாக இந்திய அணியில் 8 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஏடன் மார்க்ரம் 2 ரன்களிலும்ம், டீன் எல்கர் 4 ரன்களிலும் வெளியேறினர். அதன்பின் ஹசிம் ஆம்லாவும், ரபாடாவும் ஜோடி சேர்ந்து நேர்த்திய பந்துவீச்சை எதிர்கொண்டனர்.

பின்னர், ரபாடா 30 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 5 ரன்களிலும், ஃபாப் டு பிளஸ்ஸி 8 ரன்களிலும், குவிண்டன் டி காக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற 125 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையில், 98 பந்துகளில் ஹசிம் அம்லா அரைச்சதம் கடந்தார்.

ஹசிம் அம்லா 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் பிளாந்தர் சிறப்பான ஆடி அணியின் வீழ்ச்சியை தடுத்தார். பின்னர் பிளாந்தர் 55 பந்துகளில் 35 ரன்கள் குவித்து வெளியேறினார்.

தொடர்ந்து பெலுக்வயோ [9], நிகிடி [0] என அடுத்தடுத்து வெளியாக தென் ஆப்பிரிக்கா அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 7 ரன்கள் அதிகமாகும். அற்புதமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் [பார்த்திவ் படேல் (16) இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் [13], கே.எல்.ராகுல் [16] களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மைதானத்தில் பந்து தாறுமாறாக எகிறியது. இதனால், இந்திய வீரர்கள் பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியிடம் நிறைய அடி வாங்கி காயம் அடைந்தனர்.

கே.எல்.ராகுல் மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்கமால் [16] வெளியேறினார். தொடர்ந்து புஜாரா 1 ரன்னில் மோர்னே மோர்கல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன் பிறகு பொறுமையாக ஆடிய முரளி விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

விராட் கோலி மற்றும் ரஹானே இணை நிதானமாக ஆடியது. பிறகு விராட் கோலி 41 ரன்களிலும், ஹர்த்திக் பாண்டியா 4 ரன்களிலும் வெளியேறினர். அப்போது இந்திய அணி 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால், விரைவில் இந்திய அணி ஆட்டமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புவனேஷ்குமார், ரஹானே இணை அபாரமாக ஆடியது. இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தது. அரைச்சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 48 ரன்களில் மோர்கல் பந்தில் அவுட்டானார். அதன் பின்னர் களமிறங்கிய மொஹமது ஷமி ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடினா.

அவர் 28 பந்துகளில் [ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்] 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து புவனேஷ்குமார் 33 ரன்களிலும், பும்ரா டக் அவுட் ஆகியும் வெளியேற இந்திய அணி 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிளாந்தர், ரபாடா, மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 4 ரன்களில் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

டீன் எல்கர் 11 ரன்களிலும், ஹசிம் அம்லா 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற இன்னும் 224 ரன்கள் தேவையாக உள்ளது. இதில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகிவிடும்.

You'r reading இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யுமா தென் ஆப்பிரிக்கா - 241 ரன்கள் இலக்கு Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை