பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி அடித்தால் அது சாதனை சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் என்ன பிரச்சனை?

by Nishanth, Feb 27, 2021, 09:49 AM IST

பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் அதை சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் பிட்சை குறை கூறுவது என்ன நியாயம் என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிந்தது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடந்த அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தின் பிட்சை அனைவரும் குறை கூறுகின்றனர். இப்படி ஒரு பிட்ச் அமைத்தால் அது டெஸ்ட் போட்டியின் தரத்தை குறைத்துவிடும் என்று அனைவரும் குறை கூறி வருகின்றனர்.

இந்த பிட்ச் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இரவு பகலாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பிங்க் நிற பந்து வேகப்பந்து வீச்சுக்குத் தான் சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடந்த இதே பிங்க் பால் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை யாராலும் மறக்க முடியாது. இதனால் தான் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்திய அணியில் அக்சர் படேல், அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். முதல் 2 டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அணி தான் போட்டியிலும் வெற்றி பெற்றது என்பதால் இந்தப் போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து எந்த தயக்கமும் இல்லாமல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.ஆனால் அகமதாபாத் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இந்தியாவும் இங்கிலாந்தின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பார்ட் டைம் பவுலரான கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த இன்னிங்சிலாவது இந்திய அணியின் சுழற் பந்து வீச்சை சமாளிக்கலாம் என கருதி இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கினர். ஆனால் முதல் இன்னிங்சை விட மோசமாக இங்கிலாந்து 81 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளுமே சுழற் பந்து வீச்சாளர்களுக்குத் தான் கிடைத்தது. இதன் பின்னர் 49 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. இதில் 28 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிவடைந்தது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டது குறித்து அனைவரும் குறை கூறினர். ஆனால் இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி சதமும், இரட்டை சதமும், 3 சதமும் அடித்தால் அதை சாதனை என்று கூறுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்தால் அதுவும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மட்டும் அதை குறை கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பேட்ஸ்மேன்களும் வித்தியாசமான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

You'r reading பேட்ஸ்மேன்கள் செஞ்சுரி அடித்தால் அது சாதனை சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் போது மட்டும் என்ன பிரச்சனை? Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை