போலீசுடன் அர்ச்சகர்கள் மோதல் அத்திவரதர் தரிசனம் பாதிப்பு

swamy atthivaradar dharsan stopped for an hour due to clash between police and archakars

by எஸ். எம். கணபதி, Jul 17, 2019, 15:02 PM IST

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். 16வது நாளான நேற்று மட்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளனர். 17-வது நாளான இன்று(ஜூலை 17) அத்திவரதர் மாம்பழ நிறப் பட்டு உடுத்தி, செண்பகப்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று காலையில் சில அர்ச்சகர்கள், வி.ஐ.பி தரிசன வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த போலீசார் திடீரென அவர்களை தடுத்தனர். யாராவது வேண்டியவர்களுக்காக அவர்கள் அடிக்கடி வந்து இடையூறு செய்வதாக கூறி, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது மற்ற அர்ச்சகர்களும் பூஜைகளை நிறுத்திவிட்டு வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால், அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜீவ், ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணா, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, அர்ச்சகர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் சுவாமி தரிசனம் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, போலி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுடன் தினமும் சிலர் சிக்கி வருகிறார்கள். போலி டிக்கெட்டுடன் சிக்கியதாக இதுவரை 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க லட்சம் பேர் கூடும் காஞ்சியில் முதலுதவி வசதி இல்லாத அவல நிலை

You'r reading போலீசுடன் அர்ச்சகர்கள் மோதல் அத்திவரதர் தரிசனம் பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை