கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. உயிரிழப்பு குறைகிறது..

corona cases increasing in kovai region.

by எஸ். எம். கணபதி, Sep 15, 2020, 09:55 AM IST

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வந்தது.


ஆனால், கடந்த சில நாட்களாக சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.14) 5752 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 8511 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.
இதில், மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5799 பேரையும் சேர்த்து இது வரை 4 லட்சத்து 53,165 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய் பாதிப்பால் நேற்று 53 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8434 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 991 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 49,583 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 364 பேருக்கும், கடலூரில் 296 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 294 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 30,743 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,620 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் 498 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், திருப்பூரில் 192 பேருக்கும், ஈரோட்டில் 133 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 78,190 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 57.79 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. உயிரிழப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை