நீலகிரியில் உறை பனி: கடும் குளிரால் மக்கள் அவதி

by Balaji, Nov 13, 2020, 17:56 PM IST

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக உறைபனி விழத்துவங்கியது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசி நாட்களில் நீர் பனி விழும். நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு மேல் உறைப்பனி விழத்துவங்கும். வருடும் பனியின் தாக்கம் துவக்கத்தில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காணப்படும். பின், படிப்படியாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பனி விழும். இப்படி உரை பனி விழும் போது குளிர் மிகக் கடுமையாக இருக்கும். சில சமயங்களில் மைனஸ் டிகிரிக்கும் குறைவான நிலைக்கு சென்றுவிடும். இந்த ஆண்டு கடந்த மாதம் முதலே நீர் பனி விழத்துவங்கியது. சில நாட்கள் மழை காரணமாக, நீர் பனி குறைந்து காணப்பட்டது.தற்போது மழை குறைந்த நிலையில், நீர் பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது.

இதனால், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் சூழ்நிலை உருவானது. ஆனால், நேற்று முந்தினம் இரவு நீலகிரி மாவட்டம் முழுவதும் உறைப்பனி கொட்டியது. குறிப்பாக ஊட்டி, கேத்தி, பாலாடா, கிளன்மார்க்கன், பைக்காரா, சாண்டிநல்லா, தலைகுந்தா போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்களில் வெண்மை நிறத்தில் பனி படர்ந்து காணப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே வெண்மை நிறத்தில் பனி கொட்டிக்கிடந்தது. அதிகாலை நேரங்களில் கேரட் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள் குளிரை தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டே வேலையில் ஈடுபட்டனர்.

அதேபோல் கடும் உறைப்பனியால் இன்று காலை பணிக்கு சென்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், முன்னதாகவே உறைப்பனி விழத்துவங்கியுள்ளதால் தேயிலை மற்றும் காய்கறி விவசாயிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் காய்ச்சல் பரவலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களும் உள்ளனர். இதனால் குளிரும் அதிகமாக இருந்தது.

You'r reading நீலகிரியில் உறை பனி: கடும் குளிரால் மக்கள் அவதி Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை