திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க அனுமதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நாளை தொடங்கவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நிதிமன்றம், வழக்கு குறித்து துணைநிலை ஆளுநர், மாவட்ட ஆட்சியர், இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆலோசித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது.
தொடர்ந்து ஆலோசனை நடத்திய ஆளுநர் கிரண்பேடி,சனி பெயர்ச்சி விழாவில், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்த சான்று வைத்திருக்க வேண்டும். 200 நபர்களுக்குள் மட்டுமே அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக விசாரணைத்த உயர்நீதிமன்றம், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை. விழாவில் பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.