சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடி வந்த இரண்டு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வருகை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு திருட்டு சம்பவங்களும் ரயில் நிலையத்தில் நடைபெற்ற வருவது தொடர் கதையாகியுள்ளது.
குறிப்பாக செல் போன்களை சார்ஜ் போடுவதற்காக பயணிகள் ரயில் நிலையம் முழுவதும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி செல்போன் சார்ஜ் போடும் பயணிகளின் கவனத்தை திசை திருப்பியும் அவர்கள் பார்க்காத நேரத்தில் செல்போனை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது.
இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், ரயில்நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர்.
சந்தேகிக்கும் வகையில் நடமாடிய சிலரது வீடியோக்களை ஆய்வு செய்ததில், தொடர் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கொருக்குப்பேட்டையயை சேர்ந்த பிரகாஷ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கேபிரியேல் துரைசாமி என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.