ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கதிதான் திமுகவிற்கும் - சுப்பிரமணியன் சாமி

ஜெ. குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்றம் கூறியபோது கொண்டாடினார்கள். பிறகு உச்சநீதிமன்றம் தண்டித்தது. இங்கேயும் அதேபோல நிகழும் என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Subramanian Swamy, Karunanidhi, Jayalalitha

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. மேலும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சாமி, அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்றம் கூறியபோது கொண்டாடினார்கள். பிறகு உச்சநீதிமன்றம் தண்டித்தது. இங்கேயும் அதேபோல நிகழும் என்று தெரிவித்துள்ளார்.