மாநகராட்சியில் மலிந்து கிடக்கும் ஊழல்... நீதிபதி அதிருப்தி

மாநகராட்சி ஊழல்... நீதிபதி அதிருப்தி

Aug 30, 2018, 20:51 PM IST

சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதிகாரிகள், அலுவலர்களின் சொத்து விவரங்களை 12 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட ஜெனரேட்டரை அகற்றக் கோரி செனாய் நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவு கடமை தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

ஊழல் கண்காணிப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து, டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து 4 வாரத்திற்குள் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து மாநகராட்சி அலுவலகங்களின் முன்புறம், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தை அமைத்து, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பலகை வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். ஊழல் கண்காணிப்பு பிரிவில் ரகசிய குழு அமைத்து, மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

அதிகாரிகள், ஊழியர்களின் சொத்து விவரங்களை 12 வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் விவரங்களை ஆய்வு செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

4 வாரத்திற்குள் மாநகராட்சி ஆணையர் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை கண்டறிந்த உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் 12 வாரங்களில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading மாநகராட்சியில் மலிந்து கிடக்கும் ஊழல்... நீதிபதி அதிருப்தி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை