புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ629 கோடி முறைகேடு: ஸ்டாலின் வழக்கில் தமிழக அரசு வாதம்!
HC adjourns verdict in New Secretariat case
புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ629 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியதை எதிர்த்து திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் சம்மனுக்கு எதிராக மறைந்த முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ரகுபதி ஆணைய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
மேலும் ஆவணங்களின் அடிப்படையில் குற்ற நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு இவ்வழக்கை மாற்றியது.
இதற்கு எதிராக ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான இன்றைய விசாரணையில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ629 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
You'r reading புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ629 கோடி முறைகேடு: ஸ்டாலின் வழக்கில் தமிழக அரசு வாதம்! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News