தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் அறிவிப்பு

by Isaivaani, Jan 11, 2018, 16:20 PM IST

சென்னை: தமிழகத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் “தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவது தொடர்பான அறிக்கையை வாசித்தார்.

அப்போது, அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, பிரசிடன்சி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவனை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்றும் பெயரை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956ம் ஆண்டு ஜூலையில் கோரிக்கையினைத் தியாகி சங்கரலிங்கனார் முன் வைத்தார்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவும், 1967ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.

வரும் ஜனவரி 14ம் தேதி, வரலாற்று சிறப்புமிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.

நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

You'r reading தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை