இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பிள்ளை நியமனம்

by Isaivaani, Jan 11, 2018, 17:35 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு வரும், முதல் தமிழர் என்ற பெருமையை சிவன் பிள்ளை பெற்றுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரன்குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் புதிய தலைவராக சிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி ஒப்புதல் அளித்ததன் பேரில், இவரை மத்திய அரசு இஸ்ரோ தலைவராக நியமித்துள்ளது

சிவன் பிள்ளை பற்றி சில செய்திகள்;-

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் பிள்ளை, எம்.ஐ.டி (MIT) எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிகல் இன்ஜினியரிங் படித்தார்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை 1982ம் ஆண்டில் முடித்தார். அதே ஆண்டு இஸ்ரோவில் நுழைந்தார்.  முதல் பணியாக அவர் ஈடுபட்டது பி.எஸ்.எல்.வி (PSLV)  திட்டமாகும். 

ஒவ்வொரு பிஎஸ்எல்வி திட்டத்திலும் இவர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார். பணியில் இருந்துகொண்டே மும்பை ஐ.ஐ.டி-யில், 2006-ல் முனைவர் பட்டம் பெற்றார். 

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனை படைத்தபோது, அது சிவனின் சாதனையாகவே பேசப்பட்டது. தொடர்ந்து இஸ்ரோ நிகழ்த்திய ஒவ்வொரு சாதனைகளுக்கும் தமிழரான சிவனின் பங்களிப்பு இருந்தது.

2007ல் இஸ்ரோவின் விருதையும், 2011-ல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதையும், சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2011-ல் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.  2014-ல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை மையத்தின் இயக்குநரானார். 

2015 ஆம் ஆண்டு முதல்  தற்போது வரை கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பயணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் இயக்குநராக சிவன் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. இந்த எஞ்சின் ஆனது மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது ஆகும்.

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்துறை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன், வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள சிவன், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார்.  தற்போது அவர் கூறியதாவது:-

 "தனது முழு மனதும், அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் உள்ளது. கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருகிறோம்.

என்னை விடச் சிறந்த ஜாம்பவான்கள் உட்கார்ந்து வேலை செய்த நாற்காலியில், அமரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்ரோவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதே எனது குறிக்கோளாக இருக்கும்”  என்றார்.

You'r reading இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பிள்ளை நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை