பாஜக டூ மன்னார்குடி மாஃபியா- பாலகிருஷ்ணா ரெட்டியின் பயோடேட்டா !

Who is Balakrishna Reddy?

by Mathivanan, Jan 7, 2019, 18:20 PM IST

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி!

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்வீச்சு வழக்கில் துயரத்தை சந்தித்திருக்கிறார் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. பாஜக, அதிமுக, மன்னார்குடி உறவு என அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றித்தான் அதிமுகவில் விவாதமே நடந்து வருகிறது.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கடந்த 1998-ம் ஆண்டு ஓசூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து போராட்டம் நடந்தது. கர்நாடக மாநில எல்லையில் நடந்த இந்தப் போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதில், பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்கு போடப்பட்டது. இதே வழக்கில் 108 பேர் மீது வழக்குப் பதிவானது. அப்போது பாஜகவில் இருந்தார் பாலகிருஷ்ணா ரெட்டி.

இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார் அமைச்சர். இந்தத் தண்டனையால் அவருடைய அமைச்சர் பதவி தப்புமா என பட்டிமன்றமே நடந்து வருகிறது.

பாலகிருஷ்ணா ரெட்டி குறித்துப் பேசும் அதிமுகவினர், பாஜகவில் இருந்து வந்த குறுகிய காலத்திலேயே கார்டனில் செல்வாக்கைப் பெற்றார். அமைச்சர் பதவி கிடைத்த பிறகும் ரெட்டியின் அதகளம் தாங்க முடியாமல் தவிக்கின்றனர் கிருஷ்ணகிரி மக்கள்.

கெம்பசந்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டிக்கு சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரெட்டி அபகரிக்க முயல்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பாலகிருஷ்ணா, போலி ஆவணங்கள் மூலம் தன் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், இந்த நில விவகாரம் தொடர்பாக ஓசூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால், ரெட்டி தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

அதிமுகவில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், ஓசூரில் சசிகலா குரூப்புகளுக்குச் சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. பெங்களூரு நெடுஞ்சாலைக்குள் வரும் பாகலூரில்தான் இந்த நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ரெட்டிக்கு வந்து சேர்ந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் இளவரசிக்கும் வீட்டு உணவுகளைக் கொண்டு செல்வதும் ரெட்டிக்குக் கொடுக்கப்பட்ட பணிகள். சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார்.


இந்த விவகாரத்திலும் ரெட்டியின் பெயர் அடிபட்டது. சிறைத்துறையைக் கவனிக்கும் அதிகாரிகள் பலரும் ரெட்டியின் கட்டுப்பாட்டில் இருந்தனர். சிறை வாசல் வரையில் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு ரெட்டியின் செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்தது. இன்றளவும் சசிகலாவுக்குத் தேவையான உதவிகளை அவர் மறைமுகமாகச் செய்வதாகத் தகவல் கசிகிறது. இளவரசி மகன் விவேக்குடன் தொடர்பில் இருக்கிறார். பணரீதியாகவும் ஆள் பலத்திலும் கொடி கட்டிப் பறக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி என்கிறார்கள்.

You'r reading பாஜக டூ மன்னார்குடி மாஃபியா- பாலகிருஷ்ணா ரெட்டியின் பயோடேட்டா ! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை