திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த ஒருவன் கைது... மேலும் ஒருவன் தப்பியோட்டம்...

one person arrested in Trichy lalitha jewelery robbery

by எஸ். எம். கணபதி, Oct 4, 2019, 09:19 AM IST

திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான்.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வி.எம்.சி. காம்பளக்ஸ் என்ற 3 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் லலிதா ஜூவல்லரி உள்ளது. கடையின் இருபுற பக்கவாட்டிலும் காலியிடமாக உள்ளது. கடையின் இடது புறம் உள்ள இடம் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. கடையை சுற்றி 5 அடி உயரத்தில் சுற்றுச்சுவரும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதியன்று இரவில் இந்த கடையில் பெரும் கொள்ளை நடந்தது. இடது பக்க சுற்றுச்சுவருக்கு உள்ளே கடையின் சுவரில் கொள்ளையர்கள், ஒரு ஆள் நுழையும் வகையில் துளை போட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். கடைக்குள் தரைத்தளத்தில் ஷோ கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பிவிட்டனர். கடையின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 2 கொள்ளையர் முகத்தில் விலங்கு முகமூடி அணிந்து கொண்டு நகைகளை அள்ளும் காட்சிகள் தெரிந்தன.

முகம் மூடப்பட்டதால் அடையாளம் தெரியவில்லை. இந்த சிசிடிவி காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

கொள்ளை குறித்து நகைக்கடையின் உரிமையாளர் கிரண்குமார் கூறுகையில், கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் 800 நகைகள் தான் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் என தரைத்தளத்தில் உள்ள அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் நகைகள் கொள்ளை போகவில்லை. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.13 கோடியாகும்என்றார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த மோட்டார் பைக்கை நிறுத்திய போது, அதில் இருந்த ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி ஆற்றங்கரை வழியாக தப்பினான். மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போனவை என்பது தெரியவந்தது.

அந்த கொள்ளையன், மடப்புரத்தைச் செர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தப்பி ஓடிய சுரேஷ், ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மணிகண்டனிடம் விசாரித்த போது, மீதமுள்ள நகைகளை சீராதோப்பில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தான். இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டு, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த ஒருவன் கைது... மேலும் ஒருவன் தப்பியோட்டம்... Originally posted on The Subeditor Tamil

More Tiruchirappalli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை