கமலிடம் சிபிசிஐடி அதிகாரி 3 மணி நேரம் விசாரணை..

by Chandru, Mar 3, 2020, 17:12 PM IST

ஷங்கா் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகா்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னை பூந்தமல்லி அடுத்த ஸ்டுடியோவில் இரவு படப்பிடிப்பு நடந்தபோது விபத்து ஏற்பட்டது.

வெளிச்சத்துக்காக அதிக பாரமுள்ள விளக்குகள் ஏற்றப்பட்ட கிரேன் வெயிட் தாங்காமல் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் சி.ஸ்ரீகிருஷ்ணா, சந்திரன், மது ஆகியோர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். கமல், ஷங்கர், காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

இந்த வழக்கை முதலில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பின்னர் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாகத் துணை ஆணையர் ஜி.நாகஜோதி நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஷங்கரை அழைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் அளித்த பதில்களைப் பதிவு செய்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனிடம் இன்று விசாணை நடத்தப்பட்டது. காலையில் அவர் விசாரணை அதிகாரி முன் ஆஜரானார். சுமார் 3 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டு பதிவு செய்யப்பட்டன. அதேபோல் விபத்து நடந்த தினத்தன்று படப்பிடிப்பிலிருந்த காஜல் அகா்வால் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் லைகா அதிபர் ஆகியோரிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக அவர்களுக்கு, விரைவில் சம்மன் அனுப்பப் படும் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் தவிரப் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

You'r reading கமலிடம் சிபிசிஐடி அதிகாரி 3 மணி நேரம் விசாரணை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை