பூமணி, கருங்காளி, களவு தொழிற்சாலை போன்ற படங்களை இயக்கியதுடன் பல படங்களில் நடித்தும் இருப்பவர் களஞ்சியம். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளியவர்கள், அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் நிலை மைபற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கு அரசு உதவக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது பற்றி களஞ்சியம் கூறியிருப்பதாவது :இன்றைக்கு உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிற கொரோனா என்ற அந்த நோயிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் தங்களது குடும்பத் தை எப்படி நடத்துவது என்கின்ற மிகப்பெரிய ஒரு கேள்விக் குறிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.
தினக் கூலிகளாக இருக்கக் கூடிய மக்கள், விவசாயம் செய்து பிழைக்கிறவர்கள், பூ கட்டி பிழைப்பவர்கள் என்றிருக்கக்கூடிய எளிய மக்கள் உணவுக்கு அல்லாடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.நாம் இன்னொரு விஷயத்தையும் கவலையோடு கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இலங்கையில் நடந்த யுத்த காலத்திலும், இறுதி யுத்தம் நடந்த காலத்திலும் அங்கிருந்து அகதிகளாகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி புலம் பெயர்ந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் கிட்டதட்ட 110 முகாம்களில் வாழ்கிறார்கள். சேலம் திருச்சி மதுரை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இங்கே வந்து பெரிய சொத்து சுகங்கள் வாங்க வில்லை. தங்களுக்குத் தெரிந்த தொழில்களைச் செய்து உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எல்லாம் இன்றைக்குச் சாப்பிடுவதற்குக் கூட வழியில்லாமல் தங்கள் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.
இந்திய அரசு மேலும் ஊரடங்கு நீடித்திருப்பதால் மிகப்பெரிய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது, பிள்ளைகள் இருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு அவர்கள் பட்டினி கிடக்க முடியும் இங்கு இருக்கக்கூடிய தமிழர்களாவது உறவினர்கள், சுற்றத்தார்கள் யாரிடமிருந்தாவது எதையாவது வாங்கி சமாளித்து விடுவார்கள். எந்த ஆதாரமும் அற்று இந்த மண்ணை நம்பி ஓடிவந்து அனாதைகளாக நிற்கின்ற ஈழத்தமிழர்கள் என்ன செய்து அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள். அன்றாடம் காய்ச்சிகளாக அல்லாடிக் கொண்டிருந்த அவர்கள் அடுத்த வேலை சோற்றுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இன்று தமிழகத்தைக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புலம் பெயர்ந்து வந்த அவர்களுக்கு உதவிட முன் வரவேண்டும். இங்கே இருக்கிற தமிழர்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய், உணவுப் பொருட்கள் வழங்கு வதை போல இங்கே இருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் முகாமில் இருக்கும், தமிழர்களுக்கும் உதவிட வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒரு தூய தமிழர் ஆக இருப்பதால் நிச்சயமாகத் தமிழனின் உணர்ச்சியை உணர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு டைரக்டர் களஞ்சியம் கூறி உள்ளார்.