கொரோனா லாக் டவுனால் சினிமா படப்பிடிப்புகள் தடைப்பட்டுள்ளன. அது சமீபத்தில் ஆந்திரா மற்றும் மும்பையில் தளர்த்தப்பட்டுப் படப்பிடிப்பை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால் 10 வயதுக்குக் குறைவாக மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க மகாராஷ்டிரா அரசு தடை விதித்தது. வயதானவர்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

முன்னதாக 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை வெளிப்புற படப்பிடிப்பு மற்றும் ஸ்டுடியோக்களில் பங்கேற்க , நடிக்க அரசு தடை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரசாங்கத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒரு மூத்த குடிமகன் தனது கடையைத் திறந்து நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதை அரசு தடை செய்யாவிட்டால், 65 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் வெளியே செல்வதை எந்த அடிப்படையில் தடுத்தது என்று கோர்ட் கேள்வி எழுப்பியது. இதையடுத்தே சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க அரசு அனுமதிக்கச் சம்மதித்தது. தமிழ்நாட்டில் டிவி படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை ஆனாலும் இம்மாதத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று பேச்சு உள்ளது.














