சூர்யா, கார்த்தி நம் வீட்டுப்பிள்ளைகள் அவர்களை காயப்படுத்தாதீர்கள்... படம் ஒடிடியில் வெளியிடும் விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை..

Suriyas Suraraippottru On OTT Release: Bhaeathiraja Statement

by Chandru, Aug 26, 2020, 16:01 PM IST

நடிகர் சூர்யா தான் நடித்துத் தயாரித்துள்ள சூரரைப்போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியிடுகிறார். இதற்கு டைரக்டர் ஹரி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:திரைத்துறையினருக்கு வணக்கம்.... ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு திரையரங்கங்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த மாற்று வழிதான் OTT. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்றுத் தளங்களைத் தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப் போக்கில் அந்த இடத்துக்குத் தள்ளப்படும்.

இதற்கு நாம் கடந்த காலங்களில் வீடியோ திருட்டு (வீடியாயோ பைரசி) க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான போராட்டம், கேபிள்Tvக்கு எதிரான போராட்டம், DTH க்கு எதிரானபோராட்டம். சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியில் எல்லாவற்றையும் பின் வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம்.என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சனை தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப் கார்ன் , பார்க்கிங் விலை அதிகம். ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்.? அதனால் தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

கொரோனா காலக் கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம் இப்பொழுது தான் மத்திய அரசு படப் பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டரை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம் அவர் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சில பிரச்சனைகளைப் பேசி தீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன். குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறைகொண்டு தியேட்டரில் 35சதவிகிதம் முதல் 50 சதவீதக்குள் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம், 50 சதவீதம் மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும் ? ஏற்கனவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலே தூக்கிவிடுவார்கள் அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப்போவார்கள் குறைந்தது ஒருதிரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில் திரையிடப்பட வேண்டும். பிறகு தயாரிப்பாளர், திரை அரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தயாரிப்பாளர்களின் எங்களது நீண்டநாள் கோரிக்கையான VPF (virtual print fee) தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துக்கொண்டு எங்களுக்கான சுமையைக் கருத்தில் கொண்டு முன்வர வேண்டும். தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையை தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும். எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட திரைப் படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியுமென்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெருவார்கள், நாமும் நன்றாக இருப்போம் ஆகையால் , தமிழ் திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும் , உடனடியாக தீர்க்கப்படவேண்டும் தயாரிப்பாளர்களை வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாக இருக்கும்.

பிரச்சனைகள் இப்படி இருக்க அதை விடுத்து , பிரச்சனையை வேறுபக்கம் திருப்புவது சரியாகத் தோன்றவில்லை. சமீப நாட்களில் OTT க்கு எதிரான பிரச்சனையை சூர்யா, அவருக்கு எதிரான தனி நபர் பிரச்சனையாகத் திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.இதற்குப் பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன் நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத் தகுந்தவர். சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் OTT யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்கக் கூடிய ஒன்றுதான், அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதைத் திரையில் கொண்டுவர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும்.கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் சிவகுமார் அவர்களின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்துக் கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப் பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன்.இவர்கள் தமிழ் திரைக்குகிடைத்தபொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள்.பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்தவொரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது.இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.கொரோனாவால்பெரிதும் பாதிக்கப்பட் டுள்ள தமிழ்ரசிகர்கள் சமூக இடைவெளி யுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியதாகும். ஜீவி.பிரகாஷ் குமார் இசை அமைத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மிரட்டியுள்ள சூரரை போற்று திரை முன்னோட்டம் பார்த்துவியந்தேன்.. இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் சூரரைப் போற்று முத்திரை பதிக்கும் தமிழனைப் போற்றும்.. வாழ்த்துக்கள்.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

You'r reading சூர்யா, கார்த்தி நம் வீட்டுப்பிள்ளைகள் அவர்களை காயப்படுத்தாதீர்கள்... படம் ஒடிடியில் வெளியிடும் விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை