படுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைரலாகும் வீடியோ..

by Chandru, Jan 9, 2021, 14:57 PM IST

திரையுலகம் பளபளப்பாகத் தெரிந்தாலும் அதில் ஆபத்தும் புதைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து மாதக் கணக்கில் ஓய்விலிருந்து குணம் அடைந்திருக்கிறார். ரஜினிகாந்த்தும் சண்டைக் காட்சியில் நடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு அதில் சிக்கி மீண்டிருக்கிறார். விஜயகாந்த், சரத்குமார் .

விஜய், அஜீத் எனப் பல ஹீரோக்கள் இதுபோல் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தபோது பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சில ஸ்டண்ட் நடிகர்கள் உயிரையும் இழந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்த வலிமை பட ஷூட்டிங்கில் அஜீத் பங்கேற்று நடித்தபோது மோட்டார் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். 1990களின் நடிகர் ஒருவர் ஸ்டண்ட் காட்சியில் நடித்து முதுகெலும்பு முறிந்து இன்னமும் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கிறார். பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாபு. 1990ம் ஆண்டு இப்படம் வெளியானது. அரசியல் பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் கதை வசனத்தையும் பாபுவே எழுதி இருந்தார். அப்படத்துக்குப் பிறகு என் உயிர்த் தோழன் என்ற அடை மொழியுடன் பாபு அழைக்கப்பட்டார். விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி என்ற படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். எதையும் தானே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் பாபு. அதுவே அவருக்கு வினையாக அமைந்துவிட்டது. மனசாரா வாழ்த்துங்களேன் என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமானார் பாபு. அப்படத்தின் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் உயரத்திலிருந்து தரையில் குதிக்கும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ரிஸ்க்கான காட்சி என்பதால் டூப் நடிகரை வைத்து காட்சி படமாக்க எண்ணினர். ஆனால் தானே நடிப்பதாக பாபு தெரிவித்தார்.

அந்த காட்சிக்குத் தயாராகி அவர் குதித்தபோது தவறி வேறு இடத்தில் குதித்ததில் அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. படக் குழுவே அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை குணமாக்க முடியவில்லை. அவரது உயிரை மட்டும் காப்பாற்றிய டாக்டர்களால் அவரை மீண்டும் நடக்க வைக்க முடியவில்லை. வீட்டில் பல வருடங்களாக படுத்தப்படுகையில் இருக்கிறார் பாபு. நடமாட முடியாமலிருக்கும் எனக்கு வாழ விருப்பமில்லை என்று கூட அவர் கண்ணீர் பேட்டி அளித்திருக்கிறார். அவருக்கு அவ்வப்போது திரையுலகினர் உதவினர். தற்போது இணைய தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. பாபுவை அவரது இல்லத்துக்குச் சென்று பாரதிராஜா சந்திக்க அவரிடம் தனது பரிதாப நிலையை பாபு கூறுகிறார். அதைக்கேட்டு பாரதிராஜா கண்ணீர் வடிக்கிறார். பாபு உதவி கேட்கும் இந்த வீடியோ பலரைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

You'r reading படுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைரலாகும் வீடியோ.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை