விஜய் நடித்த மாஸ்டர் இன்று ரிலீஸ் ஆனது,, கதை என்ன தெரியுமா?..

by Chandru, Jan 13, 2021, 13:32 PM IST

கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன. அதில் சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது.அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. 100 சதவீத அனுமதியைவிட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்தார். அடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர். ரவீந்திர நாத் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'திரைத்துறையினரின் அழுத்தத்தால் , தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது.

இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். தனிநபர் இடைவெளியை பராமாரிக்க வேண்டும். கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவப் பணியாளர்களையும், முன்களப் பணியாளர் களையும் இழிவுபடுத்தும் செயலாகும். எனவே, தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது. மேலும் 100 சதவீத டிக்கெட் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். இதுகுறித்து அரசிடம் ஐகோர்ட் விளக்கம் கேட்டது. இதையடுத்து அரசு 100 சதவீத அனுமதியை ரத்து செய்து 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என அரசு உத்தரவிட்டது. மாஸ்டர் இன்று வெளியாகும் நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் நெட்டில் லீக் ஆகி உள்ளது.

இதையறிந்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து இயக்குனர் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் ஒன்றரை வருடம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மாஸ்டர் உங்களுக்காக கொண்டு வரப்படுகிறது. எல்லோரும் தியேட்டரில் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நெட்டில் யாராவது மாஸ்டர் படத்தின் காட்சிகள் வெளியாவதை கண்டால் அதை யாருக்கும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டார். கொரோனா லாக்டவுன், 50 பர்சன்ட் டிக்கெட் அனுமதி, நெட்டில் முக்கிய காட்சிகள் லீக் என எல்லா தடைகளையும் கடந்து இன்று மாஸ்டர் படம் வெளியானது. இன்று காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கியது. ரசிகர்கள் உற்சாகமாக திரை அரங்கிற்குள் ஆரவாரத்துடன் மாஸ்டர் படம் பார்த்து ரசித்தனர். முன்னதாக தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளம் முழங்கியும் கொண்டாடினர்.

மாஸ்டர் கதை:
கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜய். அவருக்கு மாணவர்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. மற்ற பேராசிரியர் போல் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடாமல் தப்பை தட்டிக் கேட்கிறார். கல்லூரி தேர்தல் நடத்த வேண்டாம் என்று மற்றவர்கள் எதிர்க்க, தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் விஜய். கலாட்டா நடந்தால் கல்லூரியை விட்டு போய்விட வேண்டும் என்று விஜய்க்கு கண்டிஷன் விதித்து தேர்தல் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு ரவுடிகள் புகுந்து கலாட்ட செய்ய விஜய் அங்கிருந்து புறப்பட தயாராகிறார். அவருக்கு 3 மாதம் விடுமுறை கொடுத்து அனுப்புகிறார் கல்லூரி நிறுவனர். அந்த 3 மாதத்தில் அவர் சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கு வாத்தியாராக செல்கிறார். அங்குதான் அட்டாகாசம் தொடங்குகிறது. ரவுடி விஜய்சேதுபதி சீர்திருத்த பள்ளி நிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி தான் செய்யும் கொலைக்கு அவர்களை கோர்ட்டில் பொறுப்பேற்க வைக்கிறார். அதற்கு விரும்பாத இரண்டு சிறுவர்களை சாகடித்து தூக்கில் தொங்கவிடுகிறார். அதைக்கண்டு அதிர்ச்சி அடையும் விஜய், சிறுவர்களை கொன்ற விஜய் சேதுபதியை பழி வாங்குவதே கதை. இதில் பாடல்கள், ஆக்‌ஷன் காட்சிகள் என்று மசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

You'r reading விஜய் நடித்த மாஸ்டர் இன்று ரிலீஸ் ஆனது,, கதை என்ன தெரியுமா?.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை