கோலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகர், நடிகைகள் தங்களின் காதல் வாழ்கையை அந்தரங்க விஷயமாக பாதுகாக்கிறார்கள். விஷயம் வெளிப்பட்டு கிசுகிசுவாக கசிந்தாலும் அதை மறுக்கின்றனர் அல்லது மவுனம் காக்கின்றனர்.நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடங்களில் திரைப் படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தொழில் அதிபரைக் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் அதை மறுத்தார். நடிப்பில் முழுகவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினரிடமும் காதல் விவகாரத்தை மறைத்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு குடும்பத்தினரே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க எண்ணியபோது அதற்குச் சம்மதம் தெரிவிக்காமல் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதைக் காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போட்டார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே 6 மாதம் முடங்கி இருந்தார். பட வாய்ப்புகளும் குறைவாக இருந்தது. இந்த தருணத்தில் அவருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதுபற்றி கேட்டபோது மழுப்பலாகப் பதில் சொல்லி வந்தார். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வேறு வழியில்லாமல் தொழி அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலிப்பது பற்றியும், அவரையே மணக்க விரும்புவதாகவும் கூறினார். அதை குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் கவுதம்-காஜல் திருமணம் நடந்து முடிந்தது. 10 வருடத்துக்கு முன்பே காஜல் அகர்வால் காதலில் விழுந்த ரகசியத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவுதம் கிட்லுவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை வெளியிட்டு இது 9 வருடத்துக்கு முன்பு டேட்டிங் செய்த போது பார்ட்டியில் எடுத்த படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் இருவரும் ஒயின் கிளாஸ் கோப்பையைக் கையில் வைத்தபடி போஸ் அளித்துள்ளனர். 10 வருடமாக மறைத்து வைத்த காதல் ரகசியத்தை காஜலே தனது டேட்டிங் படத்தை வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறார்.















