செஞ்சுரி அடித்த கேப்டன் ரஹானே முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள்

by Nishanth, Dec 27, 2020, 13:56 PM IST

ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போதைய நிலவரப்படி நல்ல நிலையில் உள்ளது. இன்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சை விட இந்தியா 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, இந்திய பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சால் 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் யாருமே அரைசதத்தை கூட கடக்கவில்லை. அதிகபட்சமாக லபுஷேன் 48 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். விராட் கோஹ்லிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானேவின் கேப்டன்சி தொடக்கம் முதலே சிறப்பானதாக இருந்தது. போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அஷ்வினை பந்துவீச அழைத்தது ரஹானேவின் கேப்டன்சியை பறைசாற்றும் வகையில் அமைந்தது. இதன் பின்னர் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வாலும், கில்லும் களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் இதன் பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா ஓரளவு சிறப்பாக ஆடினார். நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா 17 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரஹானே பொறுப்புடன் ஆடி இன்று சதத்தை கடந்தார். கில் 45 ரன்களிலும், ஹனுமா விஹாரி 21 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று சதமடித்ததன் மூலம் கேப்டன் ரஹானே மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். இந்த நூற்றாண்டில் மெல்பேர்ன் மைதானத்தில் சதமடிக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 1999ல் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது தான் கடைசியாக இந்த மைதானத்தில் சதம் அடித்தார். அதன் பிறகு இந்திய கேப்டன் ஒருவர் மெல்பேர்ன் மைதானத்தில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading செஞ்சுரி அடித்த கேப்டன் ரஹானே முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை