தோனியின் தனிதிறன் இதுதான்... கெளதம் கம்பீர் புகழாரம்!

by Sasitharan, Jan 25, 2021, 19:23 PM IST

விரைவில் ஐபிஎல் 2021 தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் அணியையைும், தோனியையும் கெளதம் கம்பீர் வெகுவாக புகழந்து பேசியுள்ளார். வரும் 2021 ஏப்ரல் - மே மாதத்தில் ஐபிஎஸ் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் முதல் ஆளாக வெளியேறியது. ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. எனவே, 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் இருக்கும் என்றும் முற்றிலும் புதுவிதமான அணி உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், மோனு சிங் ஆகிய 6 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது. சின்ன தல சுரேஷ் ரெய்னா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு, ராஜஸ்தானிடம் இருந்து ட்ரேட் முறையில் ராபின் உத்தப்பாவை வாங்கிக் கொண்டது. தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹேசல்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கெளதம் கம்பீர் புகழ்ந்துள்ளார். சிஸ்கே ஸ்ட்ரேட்டஜி சரியானது. அணி புதுப்பிக்கப்படும் என்பதற்கு, ஒட்டுமொத்தமாக அணியை மாற்றுவது என்று அர்த்தம் அல்ல. கடந்த சீசன், சி.எஸ்.கே.வுக்கு அப்படியொன்றும் மோசமான சீசனாக இருக்கவில்லை. ஏனெனில், அவர்கள் ஒவ்வொரு முறையும் ப்ளே ஆஃப் முன்னேறியதால், அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ப்ளே ஆஃப் முன்னேறவில்லை என்பதால், அணியைப் புதுப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இதுதான் தோனியின் தனிதிறன். தோனி எப்போதுமே அந்தக் குறிப்பிட்ட சீசனை மட்டும்தான் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப அணியை கட்டமைப்பார். இதுதான் சி.எஸ்.கே–வுக்கும், ஆர்.சி.பி–க்கும் உள்ள வித்தியாசம். ரசிகர்கள், சி.எஸ்.கேவுக்கு மோசமான சீசன் என்று சொன்னாலும், அவர்கள் ஐந்து வீரர்களை மட்டுமே விடுவித்துள்ளனர். ஆனால், ப்ளே ஆஃப் சென்றபோதும் ஆர்.சி.பி பத்து வீரர்களை விடுவித்துவிட்டது என்றார்.

பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல, டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் அந்த மனநிலைதான், சி.எஸ்.கேவின் வெற்றிக்கு காரணம். ஆர்.சி.பி போல மொத்தமாக பத்து வீரர்களை விடுவிக்கும்போது, அது அணியில் இருக்கும் வீரர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கிவிடும்.

பியூஷ் சாவ்லாவுக்கு அதிக விலை என்பதால் அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவரது இடத்தை கரண் ஷர்மா, இம்ரான் தாஹிர் போன்றவர்கள் நிரப்பிவிடுவர் என்றார். கேதர் ஜாதவ் 3 அல்லது 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தால், தோனி அவருக்கு இன்னொரு சீசன் கூட வாய்ப்பு கொடுத்திருப்பார். சி.எஸ்.கே சரியாகச் செயல்பட்டிருக்கிறது என்றும் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

You'r reading தோனியின் தனிதிறன் இதுதான்... கெளதம் கம்பீர் புகழாரம்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை