டெல்லியில் யார் ஆட்சி? நாளை காலை தெரியும்

by எஸ். எம். கணபதி, Feb 10, 2020, 09:33 AM IST

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை(பிப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்றும் பாஜக அதிகபட்சம் 20 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது. காங்கிரஸ் 3வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 20 மணி நேரத்திற்கு பின்பும் இறுதி கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல் அதிர்ச்சியளிப்பதாக கூறியிருந்தார். அக்கட்சியினரும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்படுகிறதோ என்று சந்தேகம் கிளப்பினர்.
இந்நிலையில் தேர்தல் கமிஷன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், டெல்லி தேர்தலில் மொத்தம் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவானதை விட 2 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்தனர்.

தற்போது வாக்குப்பெட்டிகள் அனைத்து பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 21 மையங்களில் நாளை(பிப்.11) காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என்றும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அறையில் வாக்குகள் எண்ணப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
எனவே, காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். டெல்லியில் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியமைப்பாரா, அல்லது பாஜக ஆட்சியமைக்குமா? பாஜக என்றால் யார் முதல்வர் என்ற பரபரப்பு காணப்படுகிறது.

You'r reading டெல்லியில் யார் ஆட்சி? நாளை காலை தெரியும் Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை