பாஜக புதிய தலைவர் யார்? அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்:அதிமுக உடைக்கப்படுகிறதா?

Bjp starts operation Lotus in Tamilnadu.. Admk in soup?

by எஸ். எம். கணபதி, Sep 3, 2019, 08:41 AM IST

admk bjp story

தமிழகத்தில் பாஜகவை வேரூன்ற வைப்பதற்கான அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. இதன் முதல்படியாகவே தமிழிசை சவுந்திரராஜனுக்கு கவர்னர் பதவி கொடுத்து ஐதராபாத்துக்கு அனுப்பப்படுகிறார். அடுத்த கட்டமாக, புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, திமுக, அதிமுக மீது தாக்குதல் தொடுக்கப்பட உள்ளதாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் வெற்றிக் கொடி நாட்டிய பாஜகவால், துளி கூட காலூன்ற முடியாத மாநிலம் தமிழகம் மட்டும்தான். அதனுடன் கூட்டு சேர்ந்த அதிமுக, பாமக, தேமுதிக என்று எல்லா கட்சிகளுமே எதிர்ப்பு அலைகளில் சிக்கி மூழ்கி விட்டன.

இந்த சூழ்நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி வரும் 2021 மே மாதத்தில் முடிகிறது. ஆனால், 2020 டிசம்பரிலேயே ஆட்சி முடிந்தது போல் செயலிழந்து விடும். எனவே, இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால், பாஜக இங்கு அஸ்திவாரம் போட்டு, கட்சியை வளர்ப்பதற்குள் தேர்தலே முடிந்து விடும். அதனால், மற்ற மாநிலங்களில் கையாண்ட விதத்தை பாஜக, தமிழகத்திலும் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் பல குளறுபடிகள் இருந்தன. ஆட்சியை கவிழ்ப்பதில் காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் ஆசை இருந்தது. இதனால், அங்கு ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, எடியூரப்பா தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. இது வழக்கமான அரசியல்தான்.

அதே சமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் காங்கிரசின் 15 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்களை ஆளும் பாஜக இழுத்தது. அங்கு முதல்வர் பிரமோத் சாவந்த் இந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இப்படி எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை மொத்தமாக வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.

அதே போல்தான், சிக்கிமிலும் கடந்த மாதம் நடந்தது. இந்தியாவிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக அதாவது 25 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தது சிக்கிம் ஜனநாயக கட்சித்(எஸ்.டி.எப்) தலைவர் பவன்குமார் சாம்ளிங். சமீபத்தில் நடந்த சட்மன்றத் தேர்தலில்தான் ஆட்சியை இழந்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்று சிஷ்யராக இருந்த தமாங், சிக்கிம் கிரந்திலால் முன்னணி(எஸ்.கே.எப்) என்ற தனிக்கட்சி கண்டு, ஆட்சியைப் பிடித்தார். அந்த மாநிலத்தில் மொத்தமே 32 எம்.எல்.ஏ.க்கள்தான். அதில் 17ல் வென்று தமாங் ஆட்சியைப் பிடித்தார். சாம்ளிங் கட்சி 13 தொகுதிகளில் வென்றது. 2 இடம் காலியாக உள்ளது.

இந்த சூழலில், சாம்ளிங் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்களை பாஜக திடீரென இழுத்தது. இதை எதிர்பாராத சாம்ளிங் அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்து மீள்வதற்குள், அடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிக்குத் தாவினர். இப்போது சாம்ளிங் கட்சியில் அவர் ஒருவரே எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு போகிறார். சிக்கிமில் மக்களிடம் வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக, இப்போது பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.

இதே பார்முலாவைத்தான் தமிழகத்திலும் பாஜக கையாளப் போவதாக கூறப்படுகிது. அதன்படி பார்த்தால், திமுகவை அப்படி வீழ்த்துவது கடினம். ஒரு வேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதை செய்திருந்தால் சாத்தியமாகி இருக்கலாம். இப்போது பெரும் வெற்றியை பெற்று, பலமான கட்சியாக உள்ளது. அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் அந்த கட்சிப் பிரமுகர்கள் உள்ளார்கள். எனவே, ஒரு உடன்பிறப்பை இழுப்பது கூட கடினமான காரியமாகவே இருக்கும்.

அதே சமயம், அதிமுகவை உடைத்து சிதற வைப்பது மிக எளிதான காரியம். என்னதான் தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சியாக இருந்தாலும், அதை உடைப்பது பெரிய விஷயமல்ல என்பதை ஆந்திராவில் பாஜக செய்த வேலையை யோசித்து பார்த்தால் புரியும். அங்கு பலமான ஆட்சி புரிந்து சமீபத்திய தேர்தலில் ஆட்சியை இழந்த கட்சி தெலுங்கு தேசம், இதன் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கட்சியில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களில் 4 பேரை தூக்கி விட்டது பாஜக. அந்த நாலு பேரில் ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோர், தலா ரூ.200, ரூ.300 கோடி சொத்துக்கள் வைத்துள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். இருவருமே வங்கி மோசடி குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகளில் சி.பி.ஐ, மற்றும் அமலாக்கப்பிரிவிடம் சிக்கியிருப்பவர்கள். அதனால், தலைவர் அமெரிக்காவுக்கு போனதும் அமித்ஷாவிடம் தஞ்சமாகி விட்டார்கள்.

இப்போது இந்த கட்டுரையின் கிளைமாக்சை நீங்களே எழுதி விடுவீர்கள். நான் எழுத தேவையிருக்காது அல்லவா? இருந்தாலும் எழுதுகிறேன். அதிமுக கட்சியில் முதலிடத்திலும், ஆட்சியில் 2வது இடத்திலும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே அமித்ஷாவின் ஆட்டத்துக்கு ஒப்பு கொண்டு விட்டதாகவும், அதனால்தான் அவரது மகனுக்கு எம்.பி. சீட் வாங்க முடிந்தது என்றும் அதிமுக கட்சிக்குள்ளேயே பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் ஓ.பி.எஸ். காரணமே இல்லாமல் அடிக்கடி அமித்ஷாவை சந்தித்து வந்தார். இதைத் தொடர்ந்து தான், அவர் கட்சி மாறப் போகிறார் என்று எடப்பாடி அணி கிளப்பி விட்டது. உடனே ஓ.பி.எஸ் பதறியடித்து, நான் சாகும் வரை அதிமுகவில்தான் இருப்பேன் என்று அறிக்கை விட்டார். ஆனாலும், அவரது மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு முழு ஆதரவு அளித்து, பிரதமரை ஓஹோவென புகழ்ந்து வருகிறார். எனவே, ரவீந்திரநாத் போன்று பல அதிமுக முக்கியப் பிரமுகர்கள், எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க.வுக்கு படையெடுக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால், அது எப்போது நடக்கும்? சந்திரபாபு நாயுடு அமெரிக்காவுக்கு சென்ற நேரத்தில் 4 எம்.பி.க்கள் கட்சி மாறியது போல், அமெரிக்காவில் இருந்து எடப்பாடி திரும்புவதற்குள் கூட எதுவும் நடக்கலாம். அதனால், தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்பட்டதும், அமித்ஷாவின் ஆட்டத்தை பார்க்கலாம்!

You'r reading பாஜக புதிய தலைவர் யார்? அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்:அதிமுக உடைக்கப்படுகிறதா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை