காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்... பாகம்-1

கர்மவீரர் காமராஜர்... பாகம்-1

Sep 15, 2017, 21:12 PM IST

காலத்தால் அழியாத பொக்கிஷம் காமராஜர்

காலத்தால் அழியாத தலைவர்கள் பற்றியும், காலத்தால் அழியாத வரலாற்று ஆய்வுகளையும் இனிவரும் காலங்களில் இந்த பகுதியில் காண இருக்கிறோம்.

காலங்கள் சில நேரங்களில் தம் தேவைக்கேற்ப தலைவர்களை உருவாக்குவது உண்டு. தலைவர்கள் சில நேரங்களில், காலத்தைக் கனிய வைப்பதற்காகத் தாமே தலையெடுத்து நிற்பதும் உண்டு.

பெருந்தலைவர் காமராசர் காலத்தாலும் செதுக்கப்பட்ட சிற்பி. காலத்தையே செதுக்கிய சிற்பியும் ஆவார். தயாரிக்கப்பட்ட தலைவர்கள், அதிகாரப்பீடத்தின் அழுத்தம் குறைய ஆரம்பித்தவுடன், காலாவதியாகி விடுவார்கள். அவசரத்திற்காகத் தைக்கப்பட்ட தலைவர்கள், நாளடைவில் சாயம் வெளுத்துச் சோளக் கொல்லை பொம்மையாகிவிடுவார்கள்.

ஆனால், கர்மவீரர் காமராசர், புடம்போட்டு எடுக்கப்பட்ட தியாகத்தாலும், அப்பழுக்கில்லாத சாதனைகளாலும், தலைமுறைகள் தோறும் நிற்பார். அப்பெருமகனார் வாழ்ந்த காலத்தைவிட, நிகழ்காலத்தில்தான் நிறைந்து நிற்கிறார்.

55 ஆண்டு தனது பொதுவாழ்க்கையில், 9 ஆண்டுகள் சிறைவாசம்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகள்.
தமிழக முதல்வராக 9 ஆண்டுகள்.
அகில இந்திய காங்கிரசின் தலைவராக 12 ஆண்டுகள்.
சட்டமன்ற உறுப்பினராக 16 ஆண்டுகள்.
நாடாளுமன்ற உறுப்பினராக 12 ஆண்டுகள்.

இவ்வளவு பொறுப்புகளை வகித்த அவர், விட்டுச் சென்றது நூற்றுச் சில்லரை ரூபாய்களும், 10 கதர் வேட்டி சட்டைகளும்தான். நகக்கண்களில்கூட அழுக்கேறாத அத்தலைவன் இறந்த போது, 

அவரது வீட்டை உரிமையாளர் எடுத்துக் கொண்டார்,
அவரது காரை கட்சி எடுத்துக் கொண்டது,
அவரது உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது,
அவர் பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.

பெருந்தலைவர் காமராஜரை பற்றி கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு எழுதுகிறார்.
”சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்”

இப்படிப்பட்ட தலைவரைப்போல்  இன்றும் என்றும், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்... முதல் இடம் இவரைத்தவிர வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது

-தொடரும்

You'r reading காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்... பாகம்-1 Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை