இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவது... யார் குற்றம்...?

சினிமா குறித்த சிறப்பு பார்வை

Sep 16, 2017, 22:13 PM IST

சினிமா. தனக்குள்ளிருந்து பல தலைவர்களை நாட்டுக்கு, குறிப்பாக நம் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணம் செய்துள்ளது. தமிழக மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், மக்களின் பலவீனத்தை பலமாக பயன்படுத்தி பல தலைவர்கள் சினிமா மூலம் உருவாகினார்கள்.

மக்களின் மனதை தங்களின் திரைப்படங்கள் மூலம் கொள்ளையடித்தார்கள், ரசிகர்களை தன் காந்த சக்தியால் ஈர்த்து தொண்டர்களாக்கினார்கள். இன்னும் எம்.ஜி.யாருக்காக ஓட்டு போடும் ரசிக தொண்டர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தமக்கு ஒரு திரைக்கலைஞர் பிடித்துப்போனால் அவருக்கு மாலையிட்டு மகுடம் சூட்டவும் தயங்க மாட்டார்கள். பலர் அந்த ஆசையில் இன்னும் சினிமாத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சிவாஜி கணேசன் தொடங்கி பாக்யராஜ், டி.ஆர், என பட்டியல் மிக நீண்டு விஜயகாந்த் வரை அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள தவறியவர்கள் ஏராளம்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்னும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் என பலரும் தங்களின் அரசியல் பிரவேசத்திற்கான பொன்னான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமா, தன்னைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. தனித்தனி சங்கங்கள் அமைத்து அவர்களும் தங்கள் தேவைகளுக்காக போராடி வருகிறார்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது சினிமா ஒரு கவர்ச்சியாக தொழிலாகவும், பணம் கொழிக்கும் துறையாகவும் தான் எந்த ஒரு சாமானியனுக்கும் தோன்றும். ஆனால்  ஒரு திரைப்படம் பூஜை போடப்பட்டதில் இருந்து, படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று எடிட்டிங், டப்பிங், விளம்பரம் என அனைத்து வேலைகளும் முடிந்து,  திரைக்கு கொண்டு வருவது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம்தான். 

பட ரிலீஸுக்கு முன்பு கால்சீட் பிரச்சனை, சம்பள பிரச்சனை, சேட்டிலைட் ரைட்ஸ், சேனல் ரைட்ஸ் பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சனைகள் எதுவும் அந்த படத்தை பார்க்கும் ரசிகனின் கண்ணுக்கு தெரியாது. படம் பிடித்திருந்தால் சூப்பர் ஹிட் ஆக்கிவிடுவார்கள். இல்லையென்றால் வந்த இடம் தெரியாமல் போய் விடும். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கூட வசூல்ரீதியாக வெற்றி பெற சிரமப்படும். 

நூறு நாள் ஓடினால்தான் சிறந்த படம் என்று கருதிய காலம் மலையேறிய காலம் இது. இப்போது, நான்கு நாட்களில் போட்டப் பணத்தை எடுத்து விடுகிறார்கள். வியாழன் அல்லது வெள்ளிகளில் படத்தை வெளியிடுகிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் போட்ட முதலை எடுத்துவிடுகிறார்கள். அடுத்த வெள்ளி வரை படம் ஓடினாலே அது சூப்பர் ஹிட் படமாக கருதப்படுகிறது.

இந்த கால சினிமா பிரியனின் ஆசையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் டிக்கெட் விலை சாமானிய ரசிகனை தியேட்டருக்குள் அனுமதிப்பதில்லை. மூன்று நாள் ஹவுஸ்ஃபுல், 120 ரூபாய் டிக்கெட்டின் விலை ரூ.500, முதல் 2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்தத் சூழலில் இணையதளத்தில் படங்களை வெளியிடுவதும் சினிமா வசூலை பாதிக்கிறது. 

ஜியோ போன்ற நெட்வொர்க்' களின் சேவையால் எத்தனை திரைப்படங்கள் வெளிவந்தாலும் அத்தனை படங்களையும் சாமானிய மனிதனால் இன்று டவுன்லோடு செய்து பார்க்க முடிகிறது.

இன்று, சீக்கிரம் மேலே வரவேண்டும் என்பதற்காகவும், பொருளாதார ரீதியில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவுமே சினிமாக்கள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் சினிமாக்களே இந்த அபாயகரமான இணைய தளங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது. நூறு கோடி வரை நஷ்டமான திரைப்படங்களை காண முடிகிறது. எல்லா படங்களையும் தியேட்டருக்கு கொண்டுவரத் தெரிந்த ஜாம்பவான்களால், எல்லா ரசிகர்களையும் தியேட்டருக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசிக்க நேரமில்லை, பல தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாறிவிட்டது.

"டிக்கெட் விலை குறைப்பு ஒன்றுதான் ஆரோக்கியமான சினிமாவின் முதுகெலும்பு" என்பதுதான் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் ரசிக பெருமக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது. எத்தனை துப்பறிவாளன்கள் வந்தாலும், அத்தனை ராக்கர்ஸ்களும் மறைமுகமாக இயங்கிக்கொண்டுதான் இருப்பார்கள், அதை மக்களும் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.

You'r reading இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவது... யார் குற்றம்...? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை