டி.என். பி.எஸ் சி. குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு இடைக்கால தடை ..?

தமிழ் வழி கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்க படாததால் குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

by Balaji, Nov 4, 2020, 20:26 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுத்தது. நான் அதில் முதல்நிலைத் தேர்வு, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. அரசு விதிகளின் படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருந்தும் எனக்கு அந்த சலுகையின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை. டி.என். பி.எஸ்.சி.யின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை பள்ளிக்கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி வருகிறார்கள். அவர்களை ஊக்குவிப்பதற்காகவே, இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவையும் தவறாக பயன்படுத்தப்ப டுகிறது. தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? என கேள்வி எழுப்பினர். தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

You'r reading டி.என். பி.எஸ் சி. குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு இடைக்கால தடை ..? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை