பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை!
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது.பொருளாதார நெருக்கடி காரணத்தினால் பெண்களின் கல்வி வாய்ப்பும் பறிபோகிறது. இதனால் பெண் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறான திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த வகையில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம் உதவித்தொகை வழங்குகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவா். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிச. 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிச. 28 ஆகும்.
பத்தாம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.
பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.
https://tamil.thesubeditor.com/media/2020/11/Public-Notice-2020-bilingual.pdf
You'r reading பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை! Originally posted on The Subeditor Tamil
More Special article News