பிச்சை எடுத்த டாக்டர் திருநங்கை.. வாழ்வை மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்

by Balaji, Nov 24, 2020, 14:48 PM IST

மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். மதுரை மாநகர் திலகர் திடல் காவல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கவிதா சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போது ரயில்வே நிலையம் அருகே சில திருநங்கைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது கவிதா அவர்களை கவனித்திருக்கிறார். அதில் ஒரு திருநங்கை யின் நடவடிக்கை சற்று வித்தியாசமாகவே தெரியவே அவரை தனியே அழைத்து விசாரித்திருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் ஒவ்வொரு கேள்விக்கும் அந்த திருநங்கை சரளமாக ஆங்கிலத்தில் பதில் அளித்து வந்தவர். தான் ஒரு டாக்டர் எம்பிபிஎஸ் படித்திருக்கிறேன் என்று சொல்ல அதிர்ந்து போனார் இன்ஸ்பெக்டர் கவிதா.

பொய் சொல்லாதே.. என்று மிரட்டலுடன் விசாரித்த கவிதாவிடம் இதோ பாருங்கள் மேடம் எனது எம்பிபிஎஸ் சர்டிபிகேட் என்று அந்த திருநங்கை நீட்ட அதிர்ந்து போனார் இன்ஸ்பெக்டர். அந்த சான்றிதழ் உண்மைதானா என்பதை மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்தார். அந்தச் சான்றிதழ் உண்மை தான் என்றும் அந்த திருநங்கை உண்மையிலேயே டாக்டர் தான் என்பதும் மதுரை மருத்துவக் கல்லூரியில் 2018 இல் எம்பிபிஎஸ் முடித்துள்ளதும் தெரியவந்தது. எம்பிபிஎஸ் படிக்கும்போது ஆணாக இருந்த தனக்கு படிப்பை முடித்த நிலையில் உணர்வுகள் மாறி திருநங்கையாக மாறியதாகவும் , படித்து முடித்தவுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. ஆனால் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக வேலையிலிருந்து கழட்டி விடப்பட்டு இருக்கிறார். இதைவிட கொடுமை அவரது குடும்பத்தினரும் அவரை ஓரங்கட்டியது தான். திருநங்கை என்ற சான்றிதழ் பெற முடியாததால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் வேறு வழியின்றி பேச்சை எடுப்பதாக அந்த திருநங்கை சொல்ல கவிதாவே கண் கலங்கி போனார்.

இவரது நிலையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற இன்ஸ்பெக்டர் கவிதா ஆதரவின்றி நின்ற திருநங்கைக்கான சான்றிதழை பெற்றுகொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அவரது மருத்துவ சேவை தொடர வேண்டும் என்று எண்ணி அவருக்கு கிளினிக் நடத்த தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் கவிதா. மேலும் அரசின் உரிய வழிகாட்டுதல்களோடு தனியாக வாடகை கட்டிடத்தில் கிளினிக் ஒன்றையும் ஏற்படுத்தி கொடுத்தியுள்ளார். ஆதரவின்றி இருந்த திருநங்கை பெத்தானியாபுரத்தில் வரும் 27-ம் தேதி தனியாக கிளினிக் திறந்து மருத்துவ சேவையை தொடரவுள்ளார். மதுரை மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

You'r reading பிச்சை எடுத்த டாக்டர் திருநங்கை.. வாழ்வை மாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை