பைடன் கையெழுத்திட்டது ஏன்? பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..

by Balaji, Jan 24, 2021, 16:19 PM IST

பரபரப்பாக நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடி பதவியேற்றதும் ஜோ பைடன் செய்த முதல் காரியம் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான். அவரது இந்த செயல் உலகையே உற்று நோக்க வைத்திருக்கிறது. அப்படி என்னதான் சிறப்பு இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில்..? பாரிஸ் ஒப்பந்தம் என்பது பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தமாகும். கடந்த 2015 டிசம்பர் 12 அன்று பாரிஸில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் சார்பில் நடந்த உலக மாநாட்டில், 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம். இது 2016 நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் வெகுவாக குறைக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, பூமி வெப்பமடைதலை 2 டிகிரிக்கும் குறைவாக 1.5 டிகிரி யாக கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம்.

பாரிஸ் ஒப்பந்தம் ஒரு பலதரப்பு பருவநிலை செயல்பாட்டின் அடையாளம். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கும் ஏற்றவகையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிணைப்பு இது. இந்த சிறப்புமிக்க ஒப்பந்தத்தை கைகழுவிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. ட்ரம்பின் அந்த முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்ல கடந்த நான்காண்டுகளில் ட்ரம்ப் 70-க்கும் மேற்பட்ட முக்கிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டினார். ஒபாமா அதிபராக இருந்தபோது , 2025க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 26 முதல் 28 சதவிகிதம் வரை குறைக்க திட்டமிட்டு, பசுமை பருவநிலை நிதியத்துக்கு நிதி அளித்து சிறப்பாக பங்காற்றியது. எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த சில ஏழை நாடுகளுக்கு இந்த நிதி மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் 2017 ல் இந்த நிதியை நிறுத்திவிட்டார். 2017ல் இந்த உடன்படிக்கை இருந்து வெளியேற முடிவு செய்தாராம்.

இந்த ஒப்பந்தம் நம் நாட்டிற்கு ஒரு பேரழிவு என்று சொல்லி உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் தனது முடிவை நியாயப்படுத்திய ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் ,நம் நாட்டுக்கே ஒட்டுமொத்த பேரழிவு என்று சொன்னார். மேலும் இது அமெரிக்காவின் வர்த்தகப் போட்டித்திறனைக் கடுமையாகப் பாதிக்க வைக்கும் என்றும்அப்போது அழுத்தமாக சொன்னார். நாட்டில் மிகப் பெரிய சீர்கேடுகளை உருவாக்கிய ட்ரம்ப் பின்பற்றிய கொள்கைகளை மாற்ருவதற்காக மட்டும் நான் இதை செய்யவில்லை. நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான முதல் படி இது என பைடன் தனது பதவியேற்பு விழாவின்போது பேசியதுடன், இரண்டு ட்ரில்லியன் டாலர் தொகையை இந்த திட்டத்துக்கு ஒதுக்கவும், பசுமை இல்ல வாயு தடுப்பு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். தற்போது பருவநிலை மாற்றம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு எதையும் அதிபர் பைடன் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அமெரிக்கா துணிச்சலாக மிகப்பெரியளவில் இதற்கான இலக்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றதை தொடர்ந்து ஜான் கெர்ரியைத் ஐ.நா காலநிலை தூதராக பைடன் நியமித்துள்ளார். பருவநிலை நெருக்கடியை அமெரிக்கா அவசர தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும் என்று கெர்ரி கருத்து தெரிவித்திருக்கிறார் இது உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் பருவநிலை நெருக்கடிக்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளில் அமெரிக்காவும் இனிமேல் அங்கம் வகிக்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் பைடன். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பைடனின் இந்த முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். வரும் நவம்பரில் ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் பிரதிநிதித்துவம் முக்கியமானதாக கருதப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

You'r reading பைடன் கையெழுத்திட்டது ஏன்? பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை