ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ் ..? மும்பையுடனான புள்ளி விபரம் இடிக்குதே..?

IPL cricket, Chennai and Mumbai plays first play-off matct today

by Nagaraj, May 7, 2019, 10:04 AM IST

12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது உறுதி. சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று பார்த்தால் மும்பை அணியுடனான புள்ளி விபரம் தான் ரொம்பவும் இடிக்கிறது எனலாம்.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ந் தேதி தொடங்கியது. எட்டு அணிகள் பங்கேற்ற போட்டிகளில் லீக் சுற்று முடிந்து, முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்திலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி தோனி தலைமையிலான சென்னை அணி மட்டுமே என்ற சாதனை படைத்துள்ளதுடன் ஏழு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அதில் 3 முறை சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளது.

இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்த இரு அணிகளுமே தலா 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இந்த இரு அணிகளும் தலா 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றவை என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு எதிரான சென்னை அணியின் செயல்பாடுகள் பற்றிய புள்ளி விபரம் தான் கொஞ்சம் சிக்கலாக உள்ளது எனலாம். இந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக நடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்திருக்கிறது. உள்ளூரில் சென்னையை வென்ற ஒரே அணியும் அதுதான். அதோடு, இரண்டு அணிகளும் 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், சென்னை அணி 15 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

சென்னை அணியில், கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ் நல்ல பார்மில் உள்ளனர். ராயுடு, வாட்சன் ஆகியோர் இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படி ரன் சேர்க்கவில்லை. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வாட்சன் 96 ரன் எடுத்தார். இன்றைய போட்டி முக்கியமானது என்பதால் அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இதற்கு முன் இங்கு நடந்த போட்டிகளிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர், குணால் பாண்ட்யா ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி, இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது. எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இன்று தோல்வி பெறும் அணி மோதி இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யலாம் .

மத்திய, மாநில அரசு வேலை ... தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை ..! மு.க.ஸ்டாலின் உறுதி

You'r reading ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ் ..? மும்பையுடனான புள்ளி விபரம் இடிக்குதே..? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை