வங்கதேசத்துடனான திக்.. திக்... போட்டி.! கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

CWC, India wins match against Bangladesh and enters to semifinal

by Nagaraj, Jul 3, 2019, 08:52 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 7-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது இந்தியா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் சாதனை சதம் கைகொடுக்க, பந்து வீச்சிலும் பும்ரா, பாண்ட் யா விக்கெட்டுகளை சிதறடிக்க, திகிலை ஏற்படுத்திய வங்கதேசத்தை துரத்தியடித்தது இந்தியப் படை.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முதல் அணியாக நுழைந்து விட்டது. அடுத்து தகுதி பெறுவதற்கு அணிகளிடையே பெரும் போராட்டமே நடக்கிறது என்று சொல்லலாம்.

நேற்று பர்மிங்ஹாமில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பங்கேற்ற போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை எனலாம். வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் ஜம்மென்று காலடி எடுத்து வைக்கலாம் என்ற நிலை இந்தியாவுக்கும், இந்தியாவை வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கலாம் என்ற இக்கட்டில் வங்கதேசமும் இந்தப் போட்டியை எதிர்கொண்டன.

டாஸ் வென்ற இந்திய காப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித், ராகுல் ஜோடி இந்தப் போட்டியில் அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 29. 2 ஓவர்களில் 180 ரன்களை குவித்து சாதனை படைத்தனர். இந்தத் தொடரில் 4-வது சதமடித்த ரோகித்(104) அவுட்டாக, ராகுலும் (77) அரைசதம் கடந்து அவுட்டானார். இந்த துவக்க ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்ததை, அடுத்து வந்த இந்திய வீரர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர் என்றே கூறலாம். தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்து சாதித்திருந்த கோஹ்லி (26), முந்தைய போட்டிகளில் அதிரடி காட்டிய பாண்ட்யா (0) அடுத்தடுத்து வீழ, இந்திய அணியின் வேகம் மட்டுப்பட்டது எனலாம். ரிஷப் பாண்ட் மட்டும் ஓரளவு அதிரடி (48) காட்ட, கடைசிக் கட்டத்தில் தோனி (35) வழக்கம் போல அதிரடி காட்டத் தவறினார். முதன் முறையாக உலகக் கோப்பை போட்டியில் ஆடும் தினேஷ் கார்த்திக்கும் (8) நல்ல வாய்ப்பை வீணடித்தார். இப்படி கடைசி ஓவர்களில் இந்திய வீரர்கள் சொதப்ப 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா. ஒரு கட்டத்தில் 350 ரன்களுக்கு மேல் இந்தியா ரன்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அபாரமாக பந்துவீசிய வ.தேச வீரர் முஸ்தபிகுர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், 315 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வங்கதேச வீரர்களும் கடுமையாக போராடினர் என்றே கூறலாம். பதற்றமின்றி பவுண்டரிகளை விளாசினர்.

ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் திறமை காட்டி, சீரான இடைவெளியில் வங்கதேச வீரர்களை வெளியேற்றினர்.தமிம் (22), சவுமியா(33), ஷாகிப்(66), முஸ்பிகுர் (24), மொஸ்தைக் (3),ச பிர் (36) என அடுத்தடுத்து வீழ்ந்தாலும், சபியுதீன் (51) கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டி இந்தியாவுக்கு டென்ஷனை எகிறச் செய்தார்.

ஆனால் சபியுதினுக்கு மற்ற வீரர்களின் பார்ட்னர்ஷிப் கிடைக்காததால் 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது வ.தேசம். இந்தப் போட்டியில் இந்தியத் தரப்பில் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடரில் 4-வது சதமடித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனானார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அரையிறுதிக்குள் நுழையும் அடுத்த இரு அணிகள் எவை என்பதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

வ.தேசத்துடனான போட்டி; இந்தியா பேட்டிங்..! கேதார், குல்தீப் நீக்கம் - தினேஷ், புவனேஷ்வர் உள்ளே!

You'r reading வங்கதேசத்துடனான திக்.. திக்... போட்டி.! கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை