உலக கோப்பை கிரிக்கெட் திக்.. திக்... போட்டி...! இந்தியாவின் கதையை முடித்தது நியூசிலாந்து

CWC, India Vs New Zealand semifinal match

by Nagaraj, Jul 10, 2019, 22:52 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா.கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஜடேஜாவின் போராட்டம் வீணானது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்ட நிலையில் இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது.

மான்செஸ்டரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேற்று நடந்த போட்டியின் போது முதலில் ஆடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆட்ட நேரம் முடியும் வரை மழை தொடர்ந்தது. இதனால் ரிசர்வ் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

இதனால் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியானது.முன்னணி வீரர்கள் ரோகித், ராகுல், கோஹ்லி ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தனர். இதனால் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தட்டுத் தடுமாறியது. அதன் பின் திணறல் ஆட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக்கும் நிலைக்கவில்லை. 25 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.

அதன் பின் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பாண்ட் ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தனர். இந்த ஜோடியும் அதிரடி காட்ட முடியாமல், பந்துகளை வீணாக்கி தட்டுத்தடுமாறி ஒவ்வொரு ரன்னாக சேர்த்தனர். 56 பந்துகளில் 32 ரன் சேர்த்த நிலையில் ரிஷப் பாண்ட் வெளியேற, அடுத்த சில நிமிடங்களில் பாண்ட் யாவும் 62 பந்துகளில் 32 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால் 30.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்ற நிலையில் இந்தியா தத்தளித்தது.

அப்போது தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, திடீரென எழுச்சி பெற்று சிக்சர், பவுண்டரிகளாக விளாச, ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. இதனால் சோர்ந்து போயிருந்த இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஒருபுறம் தோனி வழக்கம் போல மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துகளை வீணடித்தாலும், ஜடேஜாவின் அதிரடி அதனை ஈடு செய்தது. மளமளவென ரன் வேட்டை நடத்திய ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்திருந்த போது அவுட்டாக மீண்டும் டென்ஷன் எகிறியது.

இதனால் கடைசி 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா. ஆனாலும் களத்தில் தோனி இருந்ததால், ஏதேனும் மாயாஜாலம் நிகழ்த்தி வெற்றி தேடித் தருவார் என்று இந்திய ரசிகர்கள் திக்.. திக்... மனநிலைக்கு சென்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் 49 -வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து குறிப்படுத்தினார் தோனி .

ஆனால் அடுத்த 2-வது பந்தில் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடி ரன் அவுட்டான தோனி, இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை தவிடு பொடியாக்கினார். இதனால் அப்போதே இந்தியாவின் தோல்வி உறுதியானது. இறுதியில் புவனேஷ்வர் (0), சகால் (5) அவுட்டாக இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அத்துடன் இந்த உலக கோப்பை போட்டி தொடரிலிருந்தும் சோகமாக வெளியேறியது இந்தியா.

You'r reading உலக கோப்பை கிரிக்கெட் திக்.. திக்... போட்டி...! இந்தியாவின் கதையை முடித்தது நியூசிலாந்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை