ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகரிக்கும் மவுசு கடந்த வருடத்தை விட 28 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரிப்பு

by Nishanth, Nov 12, 2020, 18:07 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருடா வருடம் மவுசு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.இந்தியன் பிரீமியர் லீக் என்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஒரே அணியில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொண்ட போட்டி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டாததால் மைதானங்களில் இலவசமாக டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. நாள் செல்லச்செல்ல ரசிகர்களிடையே இடையே போட்டியை காணும் ஆர்வம் அதிகரித்தது.

பின்னர் ஒவ்வொரு அணிக்கும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் உள்பட அனைத்து நாட்டு வீரர்களும் அதிக ஆர்வம் காட்டினர். முதலில் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினர். பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்ததைத் தொடர்ந்து பின்னர் நடைபெற்ற போட்டிகளில் பாக். வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.வழக்கமாக மார்ச் முதல் மே வரை தான் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாகப் போட்டி தொடங்குவது நீண்டுகொண்டே சென்றது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை நடத்தப்படுமா என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் நடத்த முடியாவிட்டாலும் போட்டிகளை வெளிநாடுகளில் எங்காவது நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த செப்டம்பரில் துபாய் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. பெரும் சிரமங்களுக்கு இடையே தான் வீரர்கள் போட்டிகளில் ஆடினார்கள். அமீரகத்திற்குச் சென்ற பின்னர் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும். இது தவிர அடிக்கடி கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டும்.சமூக அகலத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்படப் பல கெடுபிடிகளையும் தாண்டி இந்த போட்டி தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த 13 வது சீசனில் டிவியில் போட்டிகளைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் முக்கிய ஸ்பான்சரான ட்ரீம் லெவன் நிறுவனத்திற்கு தன்னுடைய நன்றிகளையும் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

You'r reading ஐபிஎல் போட்டிகளுக்கு அதிகரிக்கும் மவுசு கடந்த வருடத்தை விட 28 சதவீதம் பார்வையாளர்கள் அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை